Search This Blog

30.9.08

விஞ்ஞானி - சனாதனி



சனாதனி

"நோய்க்கு வைத்தியம் பார்க்கவேண்டும் என்பவன் விஞ்ஞானி. கர்மத்தின்படி நடக்கும் என்று கருதிக் கடவுளை வேண்டிக்கொண்டு சும்மா இருப்பவன் சனாதனி ஆவான்."

------------------ தந்தைபெரியார் - "விடுதலை," 6.1.1965

கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும்



கடவுள் குழப்பம்


கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதன் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவருமே இல்லை. ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும். அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒருவிதமாய் கடவுளைப் பற்றி உளறிக்கொட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு பெயரும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் எண்ணிக்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் உருவமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் குணமும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது. அதன் செய்கையும் பலப்பல சொல்ல வேண்டியிருக்கிறது.


இந்த இலட்சணத்தில் கடவுளைப் பற்றிப் பேசும் பெரிய அறிவாளிகள் பெயரில்லான் - உருவமில்லான் - குணமில்லான் என்பதாக உண்மையிலேயே இல்லானை இல்லான் - இல்லான் - இல்லான் என்றே அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகிறவர்களே பல பெயர், பல உருவம், பல குணம், பல எண்ணிக்கை முதலியவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம்விட கடவுள் நம்பிக்கைக்காரர்களிடம் இருக்கும் ஒரு அதிசய குணம் என்னவென்றால், எந்த கடவுளைக் கும்பிடுகிறவருக்கும் கடவுள்கள் யார்? தேவர்கள் யார்? இவர்களுக்கு ஒருவருக்கொருவருள்ள வித்தியாசம் என்ன என்பதில் ஒரு சிறு அறிவும் கிடையாது. மற்றும் ஒரு அதிசயம் - கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது, தமிழிலும் கிடையாது.

தமிழில் சொல்லப்படும் கடவுள் என்கின்ற சொல்லுக்கு உண்டான கருத்துக்கு தமிழிலும் ஒரு சொல் காணப்படுவதற்கு இல்லை. அதுபோலவே அதற்கு (கடவுள் என்பதற்கு) வடமொழியிலும் சொல் காணப்படுவதற்கு இல்லை. ஆரியர் (பார்ப்பனர்) தேவர்கள் என்ற சொல்லை வேத காலத்தில் உற்பத்தி செய்து கொண்டு அதுவும் மேல்நாட்டில் அய்ரோப்பாவிலும், மத்திய ஆசியாவிலும் இருந்த பழங்கால மக்கள் கற்பித்துக் கொண்ட பல தெய்வங்களை தேவர்களாக ஆக்கி வேதத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எகிப்தியர்கள், கிரேக்கர்கள், காக்கேசிய மலைச்சாரலில் இருந்தவர்கள் முதலியவர்கள் வணங்கி வந்த தெய்வங்களேத் வேதத்தில் காணப்படும் அத்தனை தேவர்களுமாவார்கள். அதாவது, சிவன், இந்திரன் - ஜூபிடர் ஆகிய இருவருக்கும் பிரம்மாவுக்கு - சாட்டர்னஸ் யமனுக்கு - நெப்டியூன் வருணனுக்கு - சோல் சூரியனுக்கு - லூனஸ் சந்திரனுக்கு - சயோனஸ் விஸ்வகர்மாவுக்கு - காண்டர்போல்வரஸ் கணபதிக்கு - ஜூனஸ் குபேரனுக்கு - புளூட்டர்ஸ் கிருஷ்ணனுக்கு - அப்போலா நாரதனுக்கு - மெர்குரியன் ராமனுக்கு - பர்கஸ் கந்தனுக்கு - மார்ஸ் துர்க்கைக்கு - ஜூனோ சரஸ்வதிக்கு - மினர்வா ரம்பைக்கு - வீனஸ் உஷாவுக்கு - அரோரா பிருதிவிக்கு - சைபெல்வி ஸ்ரீக்கு - சிரஸ் என்கின்ற பெயருடன் இவை மேல்நாட்டிலிருந்த தெய்வங்களாகும். மற்றும் இவர்கள் நடத்தை முதலியவற்றை `புரட்டு இமாலயப் புரட்டு' என்கின்ற புத்தகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சாதாரணமாக தமிழனுக்கு தொல்காப்பியத்திற்கு முந்திய இலக்கிய நூலோ இலக்கண நூலோ கிடையாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஏதோதோ இருந்ததாகச் சொல்லி அவை மறைந்துவிட்டன என்கிறார்கள். இது இன்றைய சைவ - பெரியபுராணம், வைணவ இராமாயணம் போன்ற புளுகுகளில் சேர்க்கப்பட வேண்டியவையே தவிர காரியத்திற்குப் பயன்படக்கூடியவை அல்ல. இந்த கடவுள் என்னும் சொல்லும் தமிழனுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டில் கற்பிக்கப்பட்ட சொல்லே அல்லாமல் பழங்காலச் சொல்லென்று சொல்ல முடியாது.

தமிழனது இலக்கியங்களும் தொல்காப்பியத்திற்கும் பிற்பட்டவையேயாகும். தொல்காப்பியனையும் ஆரியன் என்றுதான் சொல்லவேண்டும். தொல்காப்பியமும் ஆரியன் வருகைக்குப் பிற்பட்டதேயாகும். இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும் பிர்மா, விஷ்ணு, சிவன், அவனது மனைவி பிள்ளைக்குட்டிகள் யாவும் ஆரியக் கற்பனை, ஆரிய வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டவை என்பதல்லாமல் தமிழர்க்குரியதாக ஒன்றுகூடச் சொல்ல முடியவில்லை. சிவனும், மாலும் (விஷ்ணுவும்) தமிழன் கடவுள்கள் என்கிறார்கள் சிலர். இந்த சிவன், விஷ்ணுக்களை இன்று வணங்கும் சைவ, வைணவர்கள் கோயில்களில் அவற்றுக்குக் கொடுத்திருக்கும் குணங்கள், செய்கைகள், உருவங்கள், சரித்திரங்கள் ஆகியவற்றில் எது, எந்தக் கடவுள், எந்தக் கோயில் தமிழுக்கு, தமிழனுக்கு உரியது என்று எந்த சைவ, வைணவராவது சொல்ல முடியுமா? சிவன் - தமிழன் என்றாலும் விஷ்ணு தமிழனென்றாலும், சைவம் - வைஷ்ணவம் என்னும் சொற்களும் அதன் இலக்கணங்களும் வடமொழி முறைகளேயாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்கள், அதன் கருத்துகள் ஆரிய மொழிகளேயாகும். நமது கோயில்களிலே உள்ள கடவுள், அவற்றின் சரித்திரங்கள் புராணங்கள் எல்லாமுமே வடமொழி ஆரியக் கருத்துகளேயாகும். இன்றும் வடமொழிப் புராணங்கள் இல்லாவிட்டால் சைவனுக்கோ வைணவனுக்கோ கடவுள், மத இலக்கியங்கள் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? மத இலக்கியங்கள் ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? ஒன்றும் காணமுடியவில்லையே? ஆரியம் இல்லையானால் சைவ, வைணவர்களுக்கு கடவுளும் இல்லை, சமயமும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டி இருக்கிறது. இன்றும் நம்மில், 100-க்கு 99 பேர்களுக்கும் ராமனும் கிருஷ்ணனும் சுப்ரமணியனும் விக்னேஸ்வரனும்தானே பிரார்த்தனைக் கடவுள்களாக இருக்கிறார்கள்? எந்த சைவ, வைணவக்ஷேத்திரங்களை எடுத்துக் கொண்டாலும் காசி முதல் கன்னியாகுமரி வரை ஆரியக் கடவுள்கள் கோயில்களையும் தீர்த்தங்களையும் கொண்டவையாகத்தானே காண்கிறோம்? தமிழனுக்கு கோயில் ஏது? தீர்த்தங்கள் ஏது? ஆகவே தமிழனுக்கு கடவுள்கள் இல்லை, கோயில்கள் இல்லை, தீர்த்தங்கள் இல்லை, திருப்பதிகள் இல்லை. இருப்பதாக காணப்படும், சொல்லப்படும் அத்தனையும் பார்ப்பான் பிழைக்கவும், அவன் ஆதிக்கத்திற்கும் நம்மை இழி மகனாக்கவும் மடையனாக்கவும் ஏற்படுத்தப்பட்டவையேயாகும் என்பதை உணர்ந்து மக்கள் ஒழுக்கத்துடனும் நாணயத்துடனும் நன்றி அறிதலுடனும் வாழ்வதையே நெறியாகக் கொண்டு வாழ வேண்டுமென்பதாக திராவிடர் கழகத் தோழர்கள் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

------------------தந்தைபெரியார் - "விடுதலை" 7.10.1962

புரோகிதக் கூட்டம் மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே



இலட்சார்ச்சனை

நம் தேசத்திற்கு இதர தேசத்தவர்களால் ஆபத்துகள் ஏற்படுமோ என்கிற பீதி உண்டாகியிருக்கிறது. நம் தேசத்திலுள்ள எல்லாச் சேத்திரங்களையும், நம்மையும் எந்தவிதமான ஆபத்துகளும் வரவொட்டாமல் தடுத்துக் காப்பாற்றும் பொருட்டு, சிறீரங்க சேத்திரத்தில் சிறீரங்கநாதனுக்கு இலட்சார்ச்சனை, மாசி மாதம் 29 ஆம் தேதி ஆரம்பித்து, பங்குனி 2 ஆம் தேதி 15.3.1942 முடிவடையும்படி நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது (இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்) என்று அறிக்கை வெளிவந்தது. அதன்படி இலட்சார்ச்சனை நடக்கிறது. இந்த இலட்சார்ச்சனை மூலம் ரங்கநாதர் ஆலயத்து ஊழியர்களுக்கும், புரோகிதக் கூட்டத்துக்கும் இலாபம்தான்! ஆனால், நாட்டுக்கு என்ன இலாபம்? ஆபத்தைப் போக்க இதுவா வழி?

இராபர்ட் கிளைவ் வந்த காலத்திலே இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே கண்டதென்ன? கிளைவின் கல்லறை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது! இந்தப் பிரிட்டிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது. அர்ச்சனைகளின் பலனா? யாகம், யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள்; பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழைமைகள்!

...பொன்னும், பொருளும், நேரமும், நினைப்பும் போருக்குச் செலவிட வேண்டிய இந்தப் பயங்கரமான வேளையிலே வெண்பொங்கலும், சித்ரான்னமும் உண்ண, ஒரு சாக்குக்காக இலட்சார்ச்சனை செய்யுங்கள், ரங்கநாதர் இரட்சிப்பார் என்று புரோகிதக் கூட்டம் கூறி மக்களின் பணத்தையும், நேரத்தையும் பாழாக்குகிறதே, இதை என்னென்பது?

----------------- அண்ணா - "திராவிட நாடு" இதழ், 5.3.1942



இந்து இட்லரிசம்

...கேள் இதைப் பரதா! இந்திரன் முதலான தேவர்கள் நம் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களிடம் தோழமையுடன் இருக்கக் கண்டேன். நம் தோழர்களின் ஆடையைக் கண்டீரோ, ஆயிரம் பொத்தல், கண்ணாயிரமுடைய இந்திரனின் கடாட்சம் அன்றோ அது! ஏழை மக்களின் வயிற்றிலே சதா மூண்டிருக்கும் பசித் தீயை என்னென்று கூறுவது? அது அக்னியின் அன்புப் பெருக்கன்றோ! பெரும்பாலான பஞ்சை மக்களின் உணவு, காற்று தானே பரதா! வாயுவின் வாஞ்சனை அல்லவோ அது! தரித்திரத்தில் புரளும் மக்களைக் கண்டிருப்பீர், வருணன் பிரத்தியட்சம் அல்லவோ அது! இதுபோல அந்த தேவாதிகள் காட்சி தருவதால்தான் நான் அந்தத் தேவாதிகளைக் குறை கூறாதீர் என்று உரைத்தேன் என்று முடித்தான் நக்கீரன்.

....பசிக்குதே பசிக்குதே என்று உரைத்தால், செய்த பாபத்தைக் காரணம் காட்டுவார்...

...வினை, எழுத்து விதி, சோதனை இவை தூளாயின தெரியுமோ? சம்மட்டியும், அரிவாளும், ஆளும் ரஷ்ய நாட்டிலே, அன்று எழுதியதை இலெனின் அழித்து எழுதிக் காட்டினார். அவதியுற்றோரை வாழச் செய்தார், அருள்மொழியாலல்ல, தேவாலயம் சுற்றியல்ல, தம் தீரத்தால், வீரத்தால் நெஞ்சு உறுதியால்!

பாதிக்குதே பசி என்று உரைப் போரும் அது உன் பாபம் என்று பதிலுரைப்போரும் அங்கு இல்லை! மத ஓடத்தில் ஏறிய மாந்தரே பலி பீடத்தில் சாய்ந்தீரே? ஆம்! வைதிகப் பீடத்திற்கு நீங்கள் இங்குப் பலியானீர்கள்! வாழ்வெனும் கடலைக் கடக்க மதமெனும் ஓடம் ஏறினீர்! பார்ப்பனியம் எனும் சண்ட மாருதம் அந்த ஓடத்தை வைதிகம் எனும் பாறை மீது மோதச் செய்து, இந்தப் பலி பீடத்தில் சாய்ந்தீர். அந்த இரத்தம் தோய்ந்த பலி பீடத்தை மனக்கண் படைத்தோர் காண முடியும்!

அந்தப் பலி பீடத்திலே சாய்ந்தவரின் தொகை கணக்கில் அடங்காது.

---------------- அண்ணா - "திராவிட நாடு" இதழ், 29.3.1942

29.9.08

தைரியமே முக்கியம்



முக்கியம்

"தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்."

------------------- தந்தைபெரியார் - "விடுதலை," 22.11.1964)

தமிழ் நாட்டு மண் - தந்தை பெரியாரால், அவர்தம் தன்மான இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மண்

அனுமான்

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில் 24 அடி உயரமுள்ள அனுமான் சிலையை எந்தவித அனுமதியுமின்றி, இரவோடு இரவாக இந்துத்துவா வாதிகள் நிறுவியுள்ளனர்.

சட்ட விரோதமாக வைக்கப்பட்ட இந்த சிலையை அகற்ற முயன்றபோது, இந்து போர்வையைப் போர்த்திக் கொண்ட ஒரு கும்பல் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக சிலையை அகற்றும் பணி தடைப்பட்டு நிற்கிறதாம்.

அடாவடித்தனமும், சட்ட மீறலும் என்பது இந்தக் கூட்டத்திற்கு ஜீவிய சுபாவம் என்றுதான் கூறவேண்டும்.

தமிழ்நாட்டின் முக்கிய சாலைகளில் (National High Ways) எல்லாம் இத்தகு அனுமான் சிலைகளை இரவோடு இரவாக (திருட்டுத்தனமாக) அமைப்பதை ஒரு திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஒரு கூட்டம் என்பதை மாநில, மத்திய அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். அதேபோல, அரசு அலுவலக வளாகங்களிலும் இந்த நச்சு விதை ஊன்றப்பட்டு வருகிறது.

இது ஓர் ஆபத்தான போக்கு - குறிப்பிட்ட ஒரு பருவத்தில் விபரீதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மண் - தந்தை பெரியாரால், அவர்தம் தன்மான இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மண்; அமைதித்தென்றல் - நல்லிணக்க மணத்துடன் வீசிக்கொண்டு இருக்கிறது இங்கு.

இத்தகு சூழ்நிலையில் ஒரு மோதலை உருவாக்கவே இந்த அனுமான் சிலையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

அனுமதியின்றி வைப்பது - அதனை அகற்றச் சென்றால் மத அடிப்படையில் பிரச்சினையை உருவாக்குவது - அதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் இந்துக்களிடம் செல்வாக்கைத் தேடிக் கொள்வது என்கிற யுக்தியைக் கையாண்டு வருகிறார்கள்.

நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் சிலைகளை வைப்பது என்றால், அதற்கு ஆயிரம் ஆயிரம் நடைமுறைகள் (Formalities) இருக்கின்றன.

ஆனால், அனுமான் போன்ற சிலைகளை நிறுவிட எந்தவித நடைமுறையும் தேவையில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே சட்டங்களைக் கையில் எடுத்துக்கொண்டு - அடாவடித்தனத்திலே இறங்குகிறார்கள்.

இந்த நிலையிலேயே இந்தப்போக்கைத் தடுப்பது தான் புத்திசாலித்தனம்; முளையிலேயே கிள்ளாவிட்டால், மரமான நிலையில் கோடரியை எடுக்கவேண்டிய அவசியம் அல்லவா ஏற்படும்!

- மயிலாடன் அவர்கள் 29-9-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன?







பாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் மொழி பெயர்ப்பாளராகச் சேர்ந்தபின், அவ்விதழின் ஆசிரியர் ஜி.சுப்புரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு விடுதலையுணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் 1905 இல் காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு பாரதி சென்று வந்தார். வரும் வழியில் கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம் உபதேசம் பெற்றார்.

நிவேதிதா தேவியின் அருளுரையும், வங்கப்பிரிவினையால் ஏற்பட்ட எழுச்சியும் பாரதியை ஒரு தீவிரமாதியாக மாற்றின. ‘சுதேசமித்திரன்’ மிதவாதப் போக்குடையது. பாரதியோ தீவிரவாதியாக மாறிவிட்டார். பாரதிக்கும், சுதேசமித்திரனுக்கும் கருத்து வேறுபாடு தோன்றவே, பாரதி அதிலிருந்து விலகி மண்டயம் சீனிவாசன் குடும்பத்தார் தொடங்கிய ‘இந்தியா’ வார ஏட்டின் ஆசிரியர் குழுவில் 1906 இல் சேர்ந்தார்.

1906 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் பாரதியார் பால பாரதச் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இச்சங்கத்தின் சார்பில் அறைக்கூட்டங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இச்சங்கத்தின் சார்பில் பாரதி விஜயவாடாவிற்குச் சென்று விபின் சந்திரபாலரைச் சந்தித்தார். அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து 1907 மே மாதத்தில் திருவல்லிக்கேணி கடற்கரையில் பேச வைத்தார். (1)

1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலா கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, இச்சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பாரதி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இச்சங்கத்தின் சார்பிலேயே 1907 சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சூரத் மாநாட்டில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் குறைந்தபட்சம் 100 பிரதிநிதிகளையாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று வ.உ.சி.யுடன் கலந்து பேசி முடிவு செய்தார். சூரத் மாநாட்டுப் பிரதிநிதிகளின் பயணச் செலவின் ஒரு பாதியை வ.உ.சி.யும், இன்னொரு பாதியை மண்டயம் சீனுவாசனும் ஏற்கும்படிச் செய்தார் பாரதி. (2)

1907 இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கூட்டத்தில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் கடுமையான மோதல் நடந்தது. மிதவாதிகள் சிலர் நாற்காலிகளைத் தூக்கி மேடையில் நின்ற திலகரை அடித்தனர். அவரைச் சென்னையிலிருந்து சென்ற தொண்டர்கள் கவசம் போல் சுற்றி நின்று தடுத்தனர். மிதவாதிகளால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த அடியாட்கள் திடீரென்று பெரிய கம்பிகளுடன் மேடைக்கு வந்து சென்னைத் தொண்டர்களை நையப் புடைத்தனர். இதனால் ஆத்திரமுற்ற தீவிரவாதிகள் கால் செருப்பைக் கழற்றி மேடையில் நின்ற மிதவாதத் தலைவர்களை அடித்தனர். இதனால் மிதவாதத் தலைவர்கள் காவல்துறையை வரவழைத்தனர். மாநாட்டைக் கலைத்து விட்டதாகவும் அறிவித்தனர்.(3) காங்கிரசுக் கட்சியில் உட்கட்சிப் பூசல் என்பது இவ்வாறு 1907லேயே ஏற்பட்டது.

1907 சூரத் கூட்டம் காங்கிரஸ் சண்டையில் முடிந்து விடவே, தீவிரவாதிகள் மறுநாள் தனியாகக் கூடி தனிக் கட்சியாகச் செயல்பட முடிவு செய்தனர். சென்னை மாகாண புதிய கட்சியின் செயலராக வ.உ.சி. சூரத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார். வ.உ.சி.யின் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணி கங்கை கொண்டான் மண்டபத்தில் ‘சென்னை ஜன சங்கம்’ என்ற அமைப்பு 11.1.1908 இல் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் நோக்கங்களாவன:

சுதேசியம், அன்னியப் பொருள் மறுப்பு குறித்துப் பிரச்சாரம் செய்தல், உடற்பயிற்சிக் கழகங்கள் நடத்துதல், சுதேசியப் பிரச்சாரத்துக்கு இளைஞர்களைத் தயார் செய்தல் முதலியன ஆகும். இச்சங்கம் ஏற்பட்ட பிறகு தான் சென்னை நகரில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் அதிகமாயின. இதனால் அரசின் பார்வை இவர்கள் மேல் விழுந்தது. (4) வ.உ.சி அவர்களின் முயற்சியால் 1906 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்’ என்னும் பெயரில் புதிய கம்பெனி அமைக்கப்பட்டது. கம்பெனியின் மூலதனம் ரூ.10,00,000. இதில் பங்கு ஒன்றுக்கு ரூ.25 வீதம் 40,000 பங்குகளைச் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. (5)

ஏட்டளவில் அமைந்த இத்திட்டத்தைச் செயலளவில் நிறைவேற்ற வேண்டி மூலதனத்தைத் திரட்ட பெரும்பாடுபட்டவர் வ.உ.சி. அவர்கள். வட இந்தியா நோக்கிச் சென்றபோது “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன். இல்லாவிட்டால் அங்கேயே கடலில் வீழ்ந்து மாய்வேன்” என்று வீரசபதம் செய்து புறப்பட்டார். வ.உ.சி. அவர்கள் பம்பாய் சென்றபோது, அவருடைய மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இருந்தார். மனைவியோ நிறைமாத கர்ப்பவதி. இந்தச் சூழலில் வ.உ.சி. ஊர் திரும்ப வேண்டும் என உறவினர்கள் வேண்டினர். வ.உ.சியோ ‘என் மக்களை இறைவன் பார்த்துக் கொள்வான்’ என்று கூறிவிட்டார். (6)

வ.உ.சி.யின் கடும் முயற்சியின் விளைவாக ‘எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ்.லாவோ’ என்னும் பெயர்கள் கொண்ட இரு ஸ்டீமர்கள் வெவ்வேறு தேதிகளில் 1907 மே மாதத்தில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன. வ.உ.சி.க்கு இருந்த தனிப்பெருஞ்செல்வாக்கு காரணமாக தூத்துக்குடி-கொழும்புவிற்கு இடையே சுதேசிக் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக நடந்தது. (7) இதனால் ஆங்கிலேயர்களின் கப்பல் கம்பெனிக்கு இழப்பு ஏற்படவே அவர்களுக்கு வ.உ.சி.யின் மீது ஆத்திரம் அதிகமாயிற்று. வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பாரதி இம்மூவரும் 1906 முதல் தமிழகத்தில் சுதேசி உணர்வை தீவிரமாக வளர்த்தனர். இருந்த போதிலும் வ.உ.சி. மீதுதான் ஆங்கிலேயருக்குக் கோபம் அதிகம்.

1907 செப்டம்பரில் விபின் சந்திரபாலர் கைது செய்யப்பட்டதை முன்னரே குறிப்பிட்டோம். அவருக்கு 6 மாதம் வெறும் காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. விபின் சந்திரபாலரைக் கைது செய்ததைக் கண்டித்து 17.9.1907 இல் ஒரு கண்டனக் கூட்டமும், 28.9.1907 இல் பாரதி தலைமையில் கண்டன ஊர்வலமும் நடைபெற்றன. (8)

விபின் சந்திரபாலர் விடுதலை செய்யப்பட்டபோது, அதைக் கொண்டாட 9.3.1908 இல் காவல்துறையின் இசைவுடன் சென்னையில் ஊர்வலமும் கூட்டமும் நடத்தப்பட்டன. இக்கூட்டத்தில் முடிவில் பாரதி கூறியதாவது: “நம் இயற்கை உரிமையில் குறுக்கிடாத சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுவோம். ஆனால் சட்டங்கள் நம் இயற்கை உரிமையில் குறுக்கிடுமேயானால் சட்டங்களை மீறுவோமாக” (9) என்று முழங்கினார்.

வ.உ.சி.யும் விபின் சந்திரபாலர் விடுதலை நாளைத் தூத்துக்குடியில் கொண்டாட ஏற்பாடு செய்தார். இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியன் வின்சிச் 8.3.1908 முதல் தூத்துக்குடியில் முகாமிட்டு வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரை 11.3.1908 அன்று கைது செய்தான். அதனால் திருநெல்வேலியில் மக்கள் கொதித்தெழுந்தனர்.

பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் (40 ஆண்டுகள் ) விதித்தான். சுப்பிரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தான். உயர்நீதிமன்றம் வ.உ.சி.யின் தண்டனைக் காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. மேல் முறையீட்டின் பேரில் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அவர் பெற்றது கடுமையான கடுங்காவல் தண்டனை ஆகும். முதலில் சணல் உரிக்கும் எந்திரம் சுற்றும் வேலையில் விடப்பட்டார், வ.உ.சி.யின் கைகளில் தோல் உரிந்து புண்ணாகி விட்டன. பின்பு கைகளிலும் கால்களிலும் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் என் செக்கை இழுக்கச் செய்தனர். சிறிது காலம் கல் உடைக்கச் செய்தனர். வ.உ.சி.யின் சிறைக்கொடுமைகள் சொல்லி மாளாதவை. (10)

‘இந்தியா’ இதழில் 1908 பிப்ரவரி முதற்கொண்டு வெளியிடப்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கருத்துப் படங்கள் ஆகியவை குறித்து தலைமைச் செயலருக்கு சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் ஒரு கடிதம் எழுதினார். ஆளுநர் மன்ற உறுப்பினர்களில் பலர், இந்தியா பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரினர். இதன்படி இந்தியா ஏட்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. (11)

‘இந்தியா’ இதழின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டுடன் ஒரு போலீஸ்காரன் இந்தியா அலுவலகத்திற்கு வந்து, அப்போதுதான் வெளியேறிக் கொண்டிருந்த பாரதியிடம் வாரண்ட் ஒன்றை நீட்டினான். அதைப் படித்த பாரதி, “இது, ஆசிரியருக்கா? ஆசிரியர் நானல்ல” என்று கூறிவிட்டு வெளியேறினார். (12)

பாரதிக்குச் சிறை செல்ல விருப்பம் இல்லை. எனவே வீட்டுக்குக் கூடச் செல்லாமல், தன் மனைவியிடம் கூடக் கூறாமல், அன்று இரவே இரகசியமாக யாருக்கும் தெரியாமல் தப்பி புதுச்சேரிக்குச் சென்று விட்டார். அவர் சிறைக்குப் பயந்து தான் சென்றார் என்பதை இந்தியா இதழின் உரிமையாளர் மண்டயம் சீனிவாசன் கூறியுள்ளார்.

“சிதம்பரம் பிள்ளையின் சிறைவாசத்தைக் கண்ட பிறகு பாரதியார் தாம் எக்காரணத்தாலும் அப்படிச் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. ‘உருநிலை தவறி வெறிகொண்டு நம்மைத் துன்புறுத்தப் புகும் ஸர்க்கார் கையிலிருந்து நமக்குத் தப்ப வழியிருக்கும் போது நாம் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? துஷ்டனைக் கண்டால் தூர விலக வழியிருக்கும்போது, தூர விலகிப் போவோம்’ என்று சொல்லி அவர் புதுச்சேரி செல்லத் தயாரானார். புதுவையில் என் நண்பரான சிட்டி குப்புசாமி அய்யங்காருக்கு ஒரு கடிதம் எழுதி அவரிடம் கொடுத்து அவரைப் புறப்படச் செய்தேன்.” (13)

பாரதியார் எப்படிப் புதுச்சேரி சென்றார் என்பதைப் பற்றி பாரதியின் நண்பர் நீலகண்ட பிரமச்சாரி கூறியுள்ளதாவது: “வழக்கமான தனது கிராப்புத் தலையை வைதீகக் குடுமித் தலையாக மாற்றிக் கொண்டு, எழும்பூரில் ரயிலேறினால் தெரிந்து விடுமென்று, சைதாப்பேட்டையில் ரயிலேறிப் புதுவை போய்ச் சேர்ந்தார். அவரது குடும்பம் சென்னையிலேயே இருந்தது.” (14)

பாரதியார் புதுவை சென்றபோது இரயிலில் அவர் மனம் என்ன பாடுபட்டது என்பதைப் பாரதியின் மனைவி செல்லம்மாள் கூறுகிறார். “பாரதியாருக்கு மனதில் ஏதேனும் ஒன்று தோன்ற ஆரம்பித்து விட்டால், அது கொஞ்ச நேரத்தில் போகாது. இரயில் ஏறிய பிறகும் போலீசாரிடம் அகப்படாமல் புதுவை போய்ச் சேர வேண்டுமே என்று கவலைப்பட்டாராம். இரயிலில் யார் வந்து ஏறினாலும், டிக்கெட் பரிசோதகர் வந்தாலும், ஸ்டேஷன் மாஸ்டர் வந்தாலும், போலீசாரால் அனுப்பப்பட்டுத் தம்மைக் கவனிக்க வந்த நபர்களாகவே தோன்றுமாம். பின்பு அச்சமுற்றோன் அழிவான் என்ற மொழிகளை ஞாபகப்படுத்தி மனத்தைத் தேற்றிக் கொள்வாராம்.” (15)

மேலும் செல்லம்மா அவர்கள் கூறியதாவது: “பாரதியாருடன் புதுவை சென்ற நண்பர் அவரை புதுவையில் விட்டு விட்டு, கூடலூர் சென்று என் தமையனிடம் இந்த விஷயத்தைக் கூறினார். அதை என் தமையனார் கேட்டு, பாரதியாரைப் போய்ப் பார்த்து, அவருக்குத் தேவையான துணிமணி முதலியவற்றை வாங்கிக் கொடுத்து விட்டு சென்னைக்கு வந்து என்னை அழைத்துப் போய் எங்கள் ஊராகிய கடயத்தில் கொண்டு விட்டார்.” (16)

‘இந்தியா’ இதழின் பதிவு பெற்ற ஆசிரியர் முரப்பாக்கம் சீனிவாசன் என்பவர் 21.8.1908 இல் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உண்மையில் எதையும் எழுதத் தெரியாது. பெயருக்குத்தான் அவர் ஆசிரியர். எனவே 12.9.1908 இல் இந்தியா ஏட்டின் உண்மையான உரிமையாளர் எஸ்.என்.திருமலாச்சாரியும், உண்மையான ஆசிரியரான சி.சுப்பிரமணிய பாரதியும் விசாரணைக்குப் பயந்து புதுச்சேரிக்கு ஓடினர் எனக் காவல்துறை குறிப்பு எழுதி உள்ளனர். (17)

பாரதியார் புதுவை சென்ற சில நாட்கள் கழித்து எஸ்.என்.திருமலாச்சாரியும் அங்கு சென்றார். மீண்டும் புதுவையில் இந்தியா இதழை அச்சடிக்கத் தொடங்கினர். தமிழக அரசினர் 1910 இல் ‘இந்தியா இதழை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் செய்யவே, அது நின்று போயிற்று. இந்தக் காலகட்டத்தில் 1910 ஏப்ரல் 4 ஆம் தேதி அரவிந்தர் புகலிடம் தேடிப் புதுவை வந்து சேர்ந்தார். அதே ஆண்டு அக்டோபரில் வ.வே.சு. அய்யரும் புதுவை வந்து சேர்ந்தார். இவர்களை பாரதி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சந்தித்து உரையாடி வந்தார். இவர்கள் வேதம், உபநிடதம் இவற்றின் பொருட்களைப் புரிந்து கொள்வது குறித்து விவாதம் செய்து வந்ததாக செல்லம்மாள் கூறுகிறார். (18)

புதுவையில் இவர்கள் மீது போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. 1911ல் வாஞ்சிநாதன் புதுவை சென்றார். ஆஷ்துரையைக் கொல்வதற்கு வ.வே.சு. அய்யர் வாஞ்சிநாதனுக்கு அங்கு ஒரு மாதம் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார். தினந்தோறும் விடியற்காலை 4 மணிக்குக் கரடிக்குப்பம் ஓடையில் நேராக குறிபார்த்துச் சுடுவதற்கு வ.வே.சு.அய்யர் வாஞ்சிக்குப் பயிற்சி கொடுத்துள்ளார். (19)

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்குத் தெரியும் என்பதைப் பலர் கூறியுள்ளனர். “புதுச்சேரி கிருஷ்ணப்பிள்ளை தோட்டம். நாற்பது பாரத மாதா சங்க வீரர்கள் ஒரு மரத்தடியிலே கூடியிருக்கின்றனர். 14.6.1911 அன்று காளி பூஜை நடக்கிறது. பாரதியின் காளிப்பாட்டு முழங்குகிறது. உள்ளே ஒற்றர் புகாமல் மாடசாமி தோட்டத்தைக் காத்து நிற்கிறான். பாரதியார் ஆவேசத்துடன் பாடுகிறார்...” என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளதை பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியுள்ளார். (20)

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. “இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. கவி பாரதியாரும் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தார்” என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார். (21)

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதியின் மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தன. எனவே இக்கொலைக்கு பாரதியாரும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. (22) பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் ஏன் சுட்டுக் கொன்றான் என்பதை அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தில் பின் வருமாறு கூறப்பட்டிருந்தது:

“ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகோவிந்தர், அர்ஜூனன் முதலியவர்கள் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு

R. வாஞ்சி அய்யர்”


என்ற கடிதம் அவனது சட்டைப்பையில் இருந்தது. (23)

ஆஷ் துரையைக் கொன்றதனால் வாஞ்சிநாதனைப் பெரிய தியாகி என்று பலர் கூறுகின்றனர். விடுதலைப் போராட்ட வீரன் வாஞ்சி என்றும் கூறுகின்றனர். ஆனால் வாஞ்சி எழுதியுள்ள கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இந்து தர்மம் ஆங்கிலேயர்களால் அழிகிறதே என்ற எண்ணத்தினால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறதே தவிர உண்மையான தேச விடுதலையின் பொருட்டன்று என்பதேயாகும்.

ஆஷ் கொலைக்கும் பாரதிக்கும் தொடர்பு உள்ளது என்பதை முன்பு சுட்டிக்காட்டியுள்ளேன். ஆனால் பாரதியார் தண்டனைக்குப் பயந்து, தனக்கும் அக்கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என 8.4.1914 இல் இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மெக்டனால்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“ஆஷ் வழக்கு விசாரணையில் வெளியான மற்றொரு விஷயம், கொலைக்குப் பல மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரி வந்தார் என்பதாகும், ஆனால் அவரைப் புதுவையில் பார்த்ததாகச் சாட்சியம் அளித்த தபால் ஆபீஸ் குமாஸ்தா கூட வாஞ்சி அய்யர் வீட்டுக்கு வந்தார் என்றோ... என்னைச் சந்தித்து என்னுடன் காணப்பட்டார் என்றோ சொல்லத் துணியவில்லை.” (24)

இக்கடிதத்தில் மேலும் பாரதி எழுதியிருப்பது என்னவென்றால், 1912இலேயே தன் நிலையை விளக்கி சென்னை கவர்னராக இருந்த லார்டு கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். (25)

சென்னை கவர்னராக லார்டு பெண்ட்லாண்டு வந்ததும் பாரதி தன் நிலையை விளக்கி அவருக்கும் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். (26)

“நான் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி மூன்று வருஷங்களுக்குப் பிறகு, தொலைதூரத்திலுள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் யாரோ ஒருவர், கொடுங்கோன்மைக்குப் பெயர் வாங்கிவிட்ட ஒரு கலெக்டரைச் சுட்டுக் கொன்றாரென்பதால், போலீஸ் கீழ்மட்ட ஆட்களது யோசனையின் பேரில் பிரிட்டிஷ் அரசாங்கம் என்னை அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக்கி என் மீது வாரண்டு பிறப்பித்தது. ஆனால் மேன்மை தாங்கிய கவர்னரின் விருப்பம் கூட அவருடைய பிற்போக்கான சகாக்களால் தடுக்கப்படுகிறதென நான் கருத வேண்டியிருக்கிறது. ஆகையால் பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவராகிய உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை அனுப்புகிறேன்... எனக்கு லார்டு பெண்ட்லாண்ட் நீதி வழங்க நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்.” (27)

பாரதியின் இக்கடிதத்தின் மூலம் நாம் அறிவது என்ன? பாரதி ஆங்கிலேயரின் தயவின் மூலம் வழக்கு எதுவும் இல்லாமல் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். இப்போது அவரிடமிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு என்பதே போய் விட்டது. மேலே கண்ட கடிதத்தை எழுதிய அதே 1914 ஆம் ஆண்டில்தான், பாரதி அச்சமில்லை என்ற பாடலை இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதினும்
... ... ... ...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே! (28)

பாரதி ஆங்கிலேய ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தபோதுதான் இப்பாடலை அவர் இயற்றியுள்ளார். பெரும்பாலான தமிழறிஞர்களும், பாரதி ஆய்வாளர்களும் இப்பாடலை மேற்கோள் காட்டி பாரதியின் வீரத்தைப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் பாரதி வீரமுடன் வாழ்ந்தாரா என்றால் இல்லை என்பதுதான் இதன் மூலம் நமக்கு விடையாகக் கிடைக்கிறது.

1916 மே 25ல் சுதேசமித்திரனில் ‘சுய ஆட்சியைப் பற்றி ஒரு யோசனை’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கருத்து வருமாறு:

“பாரத நாட்டுக்கு உடனே சுயாட்சி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் ஒரு பெரும் விண்ணப்பம் தயார் செய்து, அதில் மாகாணந்தோறும் லட்சக்கணக்கான ஜனங்கள் கையெழுத்துப் போட்டு இந்த ஷணமே பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” (29) என்ற முடிவுக்கு வந்து விட்டார். பாரதிக்கு ஆங்கிலேயரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணம் அடியோடு மாறிவிட்டது. 1916ல் ஆங்கிலேயர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே அவர் கருத்து கொண்டிருக்கிறார். 1916 டிசம்பர் 26ம் தேதி சுதேசிமித்திரன் ஏட்டில் அவர் எழுதுகிறார்:

“எல்லா ஜாதியாரும் சீட்டுப் போட்டுப் பிரதிநிதிகள் குறிக்க வேண்டும். அந்தப் பிரதிநிதிகள் சேர்ந்ததொரு மஹாசபை வேண்டும். ராஜ்யத்தில் வரவு-செலவு உட்பட எல்லா விவகாரங்களுக்கும் மேற்படி மஹாசபையார் இஷ்டப்படி நடக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கிலேயர்கள் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை. மேற்படி பிரார்த்தனை பிராமணர் மாத்திரம் செய்வதாக அதிகாரிகள் நினைக்கலாகாது. எல்லா ஜாதியாரும் சேர்ந்து விண்ணப்பம் செய்கிறோம்.” (30)

பாரதிக்குப் புதுவை வாழ்க்கை கசந்தது. முதல் உலகப் போரின் முடிவினால் பிரிட்டிஷ் அரசின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கும் எனக்கருதி பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதி, கேட்டுக் கொண்டு, 20.11.1918 அதிகாலை தன் மனைவி, மைத்துனர் ஆகியோருடன் புதுவை எல்லையைக் கடந்து விடுகிறார். சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதியை மட்டும் கைது செய்து, கடலூர் துணை நீதிபதி முன் கொணர்ந்தனர். 1914 ஆம் ஆண்டு இந்திய நுழைவுத் தடைச்சட்டத்தின் கீழ் பாரதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (31) கடலூர் வழக்கறிஞர்கள் சடகோபாச்சாரியும், நடராஜ அய்யரும் பாரதியை ஜாமீனில் விடுவிக்க முயன்று தோற்றனர்.

பாரதிக்குக் கடலூர் சப்-ஜெயில் வசதியற்றது என்று பாரதி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கேப்பர் குவாரியிலுள்ள கடலூர் ஜில்லா மத்திய சிறைக்கு மாற்றினார்கள். (32)

பின்னர் பாரதி கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:

Om Sakthi

District Jail, Cuddalore,
28 November-1918

To,
His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George, Madras.

The Humble petition of C.Subramania Bharathi,

May it please your excellency,

It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurance on my part as your excellency may well remember, the Dy.I.G (C.I.D) was sent by your Excellency’s Government a few months back, to interview me at Pondicheery. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.

I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding. I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain Your Excellency’s most obedient Servant

C.Subramaia Bharathi.
(G.O.No.1331 dt.18.12.1918 Public) (32)

இக்கடிதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி புதுவையில் இருந்தபோதே சென்னை கவர்னருக்கு கடிதம் எழுதி, சென்னை அரசு டி.ஐ.ஜி.யைப் புதுவைக்கு அனுப்பி பாரதியை விசாரித்து, அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இல்லை என்று தெரிந்து அரசுக்குத் தெரிவித்த பிறகுதான் பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் பாரதி வந்ததாகக் கூறுகிறார் என்பதே. அரசியலை விட்டு அறவே ஒதுங்கி சட்டத்துக்குட்பட்டு அமைதியான பிரிட்டிஷ் குடிமகனாக வாழ ஒப்புக்கொள்கிறார். ஆங்கில ஆளுநர் நீடூழி வாழ ஆண்டவன் அருள் புரிய வேண்டுகிறார். (33)

கடலூர் சிறைக்கு ரங்கசாமி அய்யங்கார் வந்து பாரதியைக் கண்டார். பின் ரங்கசாமியின் முன் முயற்சியால் அன்னிபெசண்டு, சி.பி. இராமசாமி அய்யர், நீதிபதி மணி அய்யர் ஆகியோர் பாரதியின் விடுதலை குறித்து ஆளுநரைச் சந்தித்து வேண்டினர். (34) மாநில அரசு மீண்டும் டி.ஐ.ஜி.யை அனுப்பியது. கீழ்க்கண்ட நிபந்தனைகளின் பேரில் பாரதி விடுதலை செய்யப்பட்டார். அவை:

1. நெல்லை மாவட்டத்தில் பாரதி விரும்பும் இரண்டு ஊர்களில் எதிலாவது ஒன்றில் மட்டுமே வாழ்க்கை நடத்த வேண்டும்.

2. பாரதியின் படைப்புகள், பேச்சுகள் ஆகியவற்றை முன்கூட்டியே குற்றப்புலனாய்வுத் துறைக்கு அனுப்பி அவற்றைத் தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டும்.

3. அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலிருந்தும் பாரதி நீங்கி விட வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் எழுத்துப்பூர்வமாகப் பாரதி ஒப்புக்கொண்ட பின்னர் மாவட்ட நீதிபதி 14.12.1918 இல் பாரதியை விடுதலை செய்தார். (35) ஆகவே, பாரதி சிறையில் இருந்த மொத்த நாட்கள் 20.11.1918 முதல் 14.12.1918 வரையுள்ள 25 நாட்களேயாகும். அதற்குள் அன்றைய பார்ப்பன உலகமே அதிர்ந்து போய் அவருடைய விடுதலைக்குப் பாடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே கண்ட நிபந்தனைகளைப் பாரதி ஏற்றுக் கொண்டு நேராகக் கடயம் சென்று விட்டார். அங்கே சமயத் தொடர்பாகப் பேசியும், எழுதியும் வந்தார். அரசியல் வாடை என்பதே அவரிடம் துளியும் இல்லை.

மேலே கண்ட நிபந்தனைகளைத் தாம் ஏற்றுக் கொண்டுள்ளதைப் பற்றிப் பரலி சு.நெல்லையப்பருக்குப் பாரதி எழுதியுள்ள கடிதத்திலும் குறித்துள்ளார். 21 டிசம்பர் 1918 இல் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

“ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு, நமஸ்காரம்.
நான் ஸௌக்யமாகக் கடயத்துக்கு வந்து சேர்ந்தேன்...

‘பாஞ்சாலி சபதம்’ இரண்டு பாகங்களையும் ஒன்றாகச் சேர்த்து அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக் கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்...

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை; நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேகிதர். தங்கமான மனுஷன். ஆதலால் அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்பவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடங் காட்டி அனுமதி பெற்றுக் கொள்ளுக...”

உனதன்புள்ள

சி.சுப்பிரமணிய பாரதி. (36)


பாரதி, காந்தியைச் சந்தித்தாரா?

முதலில், இது குறித்து வ.ரா. கூறுவதைப் பார்ப்போம்.

“1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜி கத்தீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் குடியிருந்தார். காந்தி வழக்கம்போல் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர். அந்தச் சுவருக்கு எதிர் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள். நான் வாயில் காப்போன் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.

அந்தச் சமயத்தில் பாரதியார் மடமடவென வந்தார். “என்ன ஓய்” என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

பாரதியார் : மிஸ்டர் காந்தி, இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி : மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ : இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி : அப்படியானால் இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?

பாரதி : முடியாது, நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், “இவர் யார்?” என்று காந்தி கேட்டார். ராஜாஜிதான் அவர் எங்கள் தமிழ்நாட்டுக்கவி என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா? என்றார் காந்தி” என்று வ.ரா. கூறுகிறார். (37)

காந்தி சென்னைக்கு வந்தது 18.3.1919 இல். அன்று மாலையே கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் காந்தி பேசிய பின் மூன்று பேர் மூன்று மொழிகளில் சொற்பொழிவாற்றினார்கள். மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆங்கிலத்திலும், வ.உ.சி. தமிழிலும், ஹரி சர்வோத்தமராவ் தெலுங்கிலும் பேசினார்கள். (38)

20.3.1919 இல் காந்தியின் வருகைக்கு நன்றி தெரிவித்து கடற்கரையில் ஒரு பெரும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சரோஜினி நாயுடு, டி.வி.கோபாலசாமி முதலியார், எஸ்.சோமசுந்தர பாரதி (இவர் தமிழில் பேசினார்). சத்தியமூர்த்தி தீர்மானங் கொண்டு வந்தார். (39)

இந்தக் காலகட்டத்தில் பாரதியார் காவல்துறைக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி கடயத்தில் இருந்தார். 1919 மே மாதத்தில் தான் பாரதி அரசிடம் நிபந்தனை தளர்வு பெற்றதாக கோ.கேசவன் குறிப்பிட்டுள்ளார். (40) அப்படியிருக்கும்போது 1919 மார்ச்சில் காந்தி சென்னை வந்தபோது, பாரதி எப்படி சென்னைக்கு வந்திருக்க முடியும்? 1919 பிப்ரவரியில் பாரதி காந்தியைச் சென்னையில் சந்தித்தார் என்பது எப்படிச் சரியாகும்? பாரதி 1919 இல் சென்னை வந்தார் என்றால் எத்தனை நாள் இருந்தார்? எங்கே தங்கினார். என்பதற்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எங்குமே சான்றுகள் கிடைக்கவில்லையே!

மேலும் காந்தி வந்திருந்தபோது ராஜாஜி, சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார் எல்லாரும் வீட்டில் இருந்தனர் என்றும் அதே நேரத்தில் அவர்கள் யாரையும் கேட்காமலேயே பாரதி நேரடியாக முன்பின் பார்த்திராத காந்தியிடம் தாம் பேசவிருந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்ததாகவும் வ.ரா.கூறுகிறார். அப்படியானால் சென்னையில் பாரதிக்குக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொடுத்தது யார்? பாரதிக்கு அப்போது எந்த வகையான அரசியல் உணர்வு இருந்தது? சென்னையில் தனியாகக் கூட்டம் நடத்த அவருக்கு என்ன வாய்ப்பு இருந்தது?

காந்திக்கு ராஜாஜிதான் பாரதியை அறிமுகப்படுத்தினார் என வ.ரா.கூறுகிறார். ஆனால் காந்தியோ ராஜாஜியைப் பற்றிக் கூறும்போது, சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால் அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டுபிடித்தேன். ஏனெனில் நாங்கள் தங்கியிருந்தது ஸ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்காருக்கு சொந்தமான பங்களாவாகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கியிருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால் மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தைக் கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் இராஜகோபாலாச்சாரியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். இராஜகோபாலாச்சாரியாரோ தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால் மகாதேவ தேசாய் இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருநாள் சொன்னார் என்று காந்தி கூறுகிறார். (41)

இதிலிருந்து காந்தியும், இராஜாஜியும் அப்போதுதான் முதல் முறையாகச் சந்தித்தார்கள்; எனவே சரியான பேச்சுப் பழக்கம் இல்லை என்பது தெரிகிறது. அப்படி இருக்கும்போது ராஜாஜி எப்படி பாரதியை காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்க முடியும்? பாரதி காந்தியைச் சந்தித்தார் என்றும் பாரதி ஒரு பெரிய மஹான் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி கூறினார் என்றும் வ.ரா. கூறுவது பாரதிக்குப் புகழ் வரவேண்டும் என்பதற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு கற்பனையேயாகும் என்றால் அது மிகையாகாது.

உண்மையிலேயே பாரதியை காந்தி அப்படிப் போற்றியிருந்தால், பாரதியின் மறைவு 11.9.1921இல் நேர்ந்த சில நாள்கள் கழித்து 15.9.1921 இல் காந்தி சென்னைக்கு வந்து 10 நாள்களுக்கு மேல் தமிழகத்தில் தங்கிப் பல இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசியிருந்தும், பாரதியைப் பற்றி காந்தி எங்குமே குறிப்பிடவில்லை எனத் ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலாசிரியர் அ.இராமசாமி குறிப்பிடுகிறார். (42) உண்மையில் பாரதி மீது காந்தி உயர்ந்த மதிப்பு வைத்திருந்தால் அவரைப் பற்றிப் பேசியிருக்க மாட்டாரா?

திலகர் மறைந்த போது, 1.8.1920 இல் அங்கு சென்றார் காந்தி. திலகரின் பாடையைத் தூக்குவதற்குத் தோள்கொடுக்கச் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள், “நீ வைசியன், இந்தப் பாடையைத் தொடக்கூடாது” எனக்கூறி, அவரைப் பிடித்துக் கீழே தள்ளினார்கள். (43)

திலகரின் மறைவிற்குக் காங்கிரசில் இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தனர். காந்தியும் நேருவும் நேரில் சென்றிருந்தனர். ஆனால் இதுபோன்ற எதுவுமே பாரதிக்குக் காந்தியால் நடைபெறவில்லையே!

27.8.1920 இல் திருநெல்வேலியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாகாண மாநாடு நடந்தது. அப்போது பாரதி கடையத்தில் தான் இருந்தார். திருநெல்வேலி அங்கிருந்து மிக அருகில் தான் உள்ளது. எனினும் அம்மாநாட்டிற்கு பாரதியார் செல்லவில்லையே ஏன்? (44)


பாரதி காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டாரா?

பாரதி காந்தியைப் புகழ்ந்து பாடல் எழுதியுள்ளார் என்பது உண்மை. ஆனால் காந்தியின் ஒத்துழையாமைக் கொள்கையைப் பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. 12.8.1920 இல் காந்தி சென்னையில் பேசும்போது, ஒத்துழையாமையை மிகத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். “பதினாறு வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் தாய்-தந்தை அனுமதியளிக்காவிட்டாலுங் கூடத் தங்கள் மனசாட்சி ஏற்றுக் கொள்வதானால் கல்லூரிகளையும், பள்ளிகளையும் புறக்கணிக்க வேண்டும்” (45) எனக் கூறினார்.

பாரதி இதை மறுத்து 30.12.1920 இல் சுதேசமித்திரன் ஏட்டில் எழுதியதாவது:

“இப்போது காண்பிக்கப்பட்டிருப்பதாகிய முதற்படியின் முறைகளால், அந்தப் பயன் எய்துவது சாத்தியமில்லை. தேசாபிமானிகள் மாத்திரமே சட்டசபை ஸ்தானங்களைப் பகிஷ்காரம் செய்ய, மற்ற வகுப்பினர் அந்த ஸ்தானங்களையெல்லாம் பிடித்துக் கொள்வார்கள். இந்தியாவில் ஆங்கில ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்தல் அரிதென்று தோன்றுகிறது. இங்ஙனமே வக்கீல்கள் தம் உத்தியோகங்களையும், பிள்ளைகள் படிப்பையும் விடும்படிச் செய்தல் இப்போது நம்மால் முற்றிலும் ஸாதிக்க முடியாத விஷயமாகத் தோன்றுவதுடன் குறிப்பிட்ட பயனெய்தி விடுமென்று தீர்மானிக்கவும் இடமில்லை.” (46)

1921இல் பாரதி சென்னை மாகாணத்தில் அரசியல் வளர்ச்சி என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார். அதில் புதுவையில் “நான் எவ்வளவோ தடுத்தும் கூட இந்தியா ஏட்டில் தீவிரமான கருத்துகள் வெளிவர அனுமதிக்கப்பட்டன” (47) என்று எழுதியுள்ளார்.

மேற்கண்ட சான்றுகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது, பாரதி 1906 முதல் 1908 வரை ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்றும் 1908 இல் புகலிடம் தேடிப் புதுவைக்குச் சென்றவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பு குறைய ஆரம்பித்து, பாரதியின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வே இல்லாமல் போயிற்று என்பதே உண்மையாகும்.

அடிக்குறிப்பு

1. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.76
2. மேற்படி நூல்.ப.77,78
3. வ.உ.சி.யும் பாரதியும் (தொ.ஆ) இரா.வெங்கடாசலபதி, மக்கள் வெளியீடு, சென்னை, ப.31,32
4. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும், ப.79
5. என்.சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.98
6. மேற்படி நூல் ப.102
7. மேற்படி நூல் ப 105
8. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.77
9. மேற்படி நூல் ப.80
10. என்.சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.173-183
11. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும். ப.108
12. பிரேமா நந்தகுமார், சுப்பிரமணிய பாரதி, ப.32
13. வ.உ.சி.யும் பாரதியும், ப.152
14. பாரதியைப் பற்றி நண்பர்கள் (தொ.ஆ) இரா.அ.பத்மநாபன், ப.58
15. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.55
16. மேற்படி நூல், ப.57
17. கோ.கேசவன், பாரதியும்-அரசியலும் ப.209
18. பாரதியார் சரித்திரம், செல்லம்மா, ப.65
19. V.V.S.Iyer. R.A.Padmanaban, P.111
20. தொ.மு.சி.ரகுநாதன், பாரதி காலமும் கருத்தும், ப.410
21. மேற்படி நூல், ப.411
22. பாரதி புதையல் பெருந்திரட்டு (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.22
23. ஆ.சிவசுப்பிரமணியன், ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், மக்கள் வெளியீடு, ப.30
24. பாரதியின் கடிதங்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.47
25. மேற்படி நூல் ப.51
26. மேற்படி நூல் ப.53
27. மேற்படி நூல் ப.55
28. பாரதியார் கவிதைகள், நி.செ.பு.அ.1994, ப.254
29. பாரதித் தமிழ் (தொ.ஆ) பெ.தூரன். ப.175
30. மேற்படி நூல் ப.223
31. கோ.கேசவன், பாரதியும் அரசியலும் ப.130
32. பாரதியின் கடிதங்கள், ப.57
33. ப.இறையரசன், இதழாளார் பாரதி, நி.செ.பு.அ. ப.396, 398
34. ரா.அ.பத்மநாபன், சித்திரபாரதி, ப.138
35. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.130,131
36. பெ.தூரன், பாரதித் தமிழ் (தொ.ஆ) ப.297, 298
37. வ.ரா, மகாகவி பாரதியார், பழனியப்பா பிரதர்ஸ், ப.163-165
38. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.235-237
39. மேற்படி நூல் ப.239
40. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.214
41. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.245
42. மேற்படி நூல், ப.319
43. தனஞ்செய்கீர் லோக்மான்ய திலகர், பாப்புலர் பிரகாசன், பம்பாய் (ஆங்கில நூல்) ப.442
44. கோ.கேசவன், பாரதியும் அரசியலும், ப.214
45. அ.இராமசாமி, தமிழ்நாட்டில் காந்தி, ப.274
46. பெ.தூரன், பாரதித்தமிழ் (தொ.ஆ) ப.340
47. பாரதிப் புதையல் பெருந்திரட்டு ப.553

-------------------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் இரண்டாம் அத்தியாயம் பக்கம் -13-29

------------------நன்றி: "கீற்று" இணையதளம்

பிரம்மாவை மிரள வைத்த பெரியார்




தமிழகத்தில் முதன்முதலில் கர்ப்பத்தடைப் பிரச்சாரம் செய்தவர், அரசாங்கத்தை அப்படிப் பிரச்சாரம் செய்யச் சொன்னார். பெரியாராகத்தான் இருப்பார் போலும். 1928 லேயே இதுபற்றி எழுதினார். அப்போது. அது, அநேகருக்கு திடுக்கிடும்படியான செய்தியாய் இருந்தது; ஆனால், இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தவிக்கப்படும் ஒரு சாதாரண சேதியாய் விட்டது என்று பெரியார் 1930-ல் எழுதினார். இது மதவிரோதம் என்றும் எதிர்க்கப் பட்டது. பெரியாரோ இது பெண் விடுதலைக்கு ஒரு முன்தேவை என்றார். மக்கள் தொகைப் பெருக்க கண்ணோட்டத்திலிருந்து அல்ல. பெண்ணிய நோக்கிலிருந்து கர்ப்ப ஆட்சி பற்றி பேசினார்.

பெரியாருக்கு மிகவும் பிடித்தவர் இங்கிலாந்து தத்துவஞானியாகிய பெட்ரண்டு ரஸ்ஸல்.. நான் ஏன் கிறிஸ்தவனல்ல? என்கிற அவரின் பிரபலமான உரையை தமிழில் வெளியிட்டவர். கர்ப்பத் தடைப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று அப்போது அவர் கூறியிருந்ததை மேற்கோள் காட்டி எழுதினார் பெரியார், மிதமிஞ்சிய குழந்தை களைப் பெறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார் ரஸ்ஸல். பெரியாரோ அவரிலும் மேலாக காரியார்த் தமாகச் சிந்தித்தார். அது - மருந்தின் மூலம் நோயைத் தடுப்பது எவ்வாறு தவறில்லையோ அதுபோலவே சிகிச்சை மூலம் மிதமிஞ்சிய பிள்ளைப் பேற்றைத் தடுத்து நிறுத்துவதும் தவறில்லை. இந்த நாட்டைப் பொறுத்தமட்டும் பெட்ரண்டு ரஸ்ஸல் யோசனை பயன்படாது. ஏனெனில் மிதமிஞ்சிய குழந்தைகளைப் பெறுகிறவர்களுக்குத் தனி அபராதம் எதுவும் தேவையில்லை. அவர்களது வேதனை ததும்பும் வாழ்க்கையே போதும்.

பள்ளிப் படிப்புக்கூட முடிக்காத நம்மூர்காரர் உலகத்திலே ஞானியாகத் திகழ்ந்த ரஸ்ஸல் பேச்சுக்கு கச்சிதமான எதிர்பாட்டுப் பாடியிருப்பதை ரசிக்கலாம். அதிகப் பிள்ளைகள் பெறுவோர்க்கு தனியாக எதற்கு அபராதம்? பிள்ளைப்பேறே பெரும் அபராதம் அன்றோ! பிறகு என்ன செய்யவேண்டும்? பெரியாரின் தீர்க்க தரிசனத்தை நோக்குங்கள்.

மூன்று குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு இலவச கர்ப்பதடை சிகிச்சை செய்யப்படும் என்று ஆஸ்பத்திரிகளில் அறிவிக்கப்படுமேயானால், இன்றைய மூடநம்பிக்கை வழிந்தோடும் நிலையிலும் கூட, மாதம் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் சிகிச்சை பெறுவார்கள் என்பது நிச்சயம்.

இரண்டு குழந்தைகள் பெற்றவர்களுக்கு இன்று இலவசமாக கர்ப்பத்தடை அறுவைசிகிச்சை நடக்கிறது. இதற்கு அன்றே வழி வகுத்துக் கொடுத்தவர் பெரியார். பிள்ளைபேறு என்பது கடவுள் கொடுத்தது. அதைத் தடுப்பது பாவம் என்றிருந்த காலத்தில் ஒரு கத்திரிக்கோலால் சிருஷ்டித் தொழிலையே நிறுத்தச் சொன்னவர் அவர், பிரம்ம தேவனையே மிரள வைத்தவர்!

------------------ தோழர் அருணன் எழுதிய
"பெரியாரின் பெண்ணியம்" பக்கம் 57, மற்றும் 104.

பார்ப்பனர் அடிக்கும் கொள்ளை

வித்தியாதரப் புராணம்

ரயில்வே பிரயாணம் வெகு ஜனக்கூட்டம், சாஸ்திர சம்பந்தமான தர்க்கம். ஒன்றுக்கொன்று தகவலில்லாப் போராட்டம் பிரயாணிகளிலொருவன் எழுந்து நின்று மகா ஜனங்களே! ஈ.தென்ன ஏக தடபுடல் எல்லோரும் பேசுகின்றீர்களே? யார் வார்த்தையை யார் கேட்கின்றது. நம் தேசாசாரமிப்படி கெட்டுப் போய்விட்டது. யாராவது ஒருவர் பேசினால் அதை முற்றிலும் கவனித்து ஆராய்ச்சி செய்து இதன் பிழை இன்னதென்றறிந்து பதில் சொல்லுகின்ற தேயில்லை. ஒருவர் பேசும்பொழுது பின்னால் சில சங்கதிகளை சொல்ல எண்ணி அதற்காதரவாய் முன்னால் சிலவற்றை சொல்ல வேண்டியதாகவரும், அங்ஙனம் வார்த்தை பயனற்றதாயுமுள்ள அதைக் கவனியாது உடனே தர்க்கம்; அதனால் சண்டை; ஒற்றுமையென்பது செத்தே போய் விட்டது.

உபயோகமான வஸ்து இன்னதென்பது கனவிலும் கூட ஞாபகமில்லை. ஆராய்ச்சியின் குணம் அடியோடு நாசம் யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பிக்கை. மறு நிமிஷத்திலேயே முற்றிலும் கை விட்டு விடுகின்றோம். ஆரிய தந்திரமென்னும் பாதாளத்தில் அமிழ்ந்துவிட்டோம். கண்டதெல்லாம் தெய்வம், சொன்னதெல்லாம் மந்திரம்; கட்டுவதெல்லாம் கோவில், சோம்பேறியாய் திரிவதே ஞானம்; ஆத்மா ஆரியற்குதானுள்ளதாம். அவர்கள் சொன்னதே வேதம்; தெய்வ பேதமோ கோடி ஜாதி பேதமோ அதற்கு அதிகம் அய்யோ பாவம் ஆரிய தந்திரிகளே! இம்மட்டிலாவது தேச விர்த்தியைத் தேடப்படாதா? உம் மோசத்தை வெளியாக்க லாகாதா? தேசம் க்ஷணித்து சாம்பலாய் போயினபின் யாரை வஞ்சிப்பீர்கள்? எங்கிருந்து பிழைப்பீர்கள்? தீயைக் கக்கின மூங்கில் போல நீங்களும் சேர்ந்துதானே அழிய வேண்டும்! என்ன அறிவு! என்ன சக்தி! எப்படி பிழைப்போம். எந்நாட் கரையேறுவோம். இது யார் செய்த மோசம், ஆ! தெய்வமே, எங்கள் தேசத்தை வெறுத்தாயோ. பன்னாட்டுக்கும் கப்பல் கப்பலாய் போகின்றனையே. எங்களை முற்றிலும் கைவிட்டுவிடுவாயோ. நினைக்க நினைக்க நெருப்பாய் எரிகின்றதே.

அம்மா உலக மாதாவே! உன் பிள்ளைகளை ஏனிப்படி வதைக்கின்றாய். துஷ்டப்பிள்ளைகளை இரக்ஷிக்க வேண்டிய அவசியமானாலும் பட்டினி போட்டுக் கொல்லாதே. ஒரே முகூர்த்தத்தில் விழுங்கிவிடு. இன்னும் நல்ல பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வாய். எல்லாம் மோசம்; எல்லாம் வஞ்சகம்; எத்தனை தெய்வம்; எத்தனை லிங்கம்? எங்கிருக்கின்றது? அக்னி லிங்கமாம்! அதிலிருக்கும் அதிசயம் விக்கிரகத்தில் சந்தனம் பூசினால் காய்ந்து போகின்றதாம். இதிருக்குமிடம் இயற்கையாகவே எரிமலை. ஒர் வகையான அந்தக் கல்லினாலடித்தது விக்கிரகம் இதில் பூசிய சந்தனம் காய்ந்து விட்டதாம்; கண்டவர்கள் இதயங்களித்துவிட்டது. லிங்க மோசடி.

நமக்கென்னத்துக்குப் பணம் போட்டுவிடுங்கள் சாமிக்கே யென்று கொட்டி விட்டு வருகின்றோம். வாய்வு லிங்கமாம், அதிலுண்டாகும் அதிசயம் லிங்கத்தின் சமீபத்தில் எரிகின்ற விளக்கு வாய்வு லிங்கத்தின் விசேடத்தால் ஆடுகின்றதாம் என்ன தீக்ஷண்யம்! லிங்கத்தின் இரு பக்கத்திலும் பொடித் துவாரங்களிட்டிருக்கின்றன. அடி பக்கத்தில் மேலேயிருந்து வாய்வு செல்லும்படியான துவாரமிருக்கின்றன. அதன் வழியே காற்று பிரவேசித்து உச்சியிலுள்ள சிறு துவாரத்தின் வழியாயோடுகின்றது எந்த அறிவாளிகளாவது லிங்கத்தின் மேல்புறத்தை செவ்வனே அடைத்துக் கொண்டு விளக்கு ஆடுகின்றதா என்று பார்த்தீர்களா? பிள்ளை எப்படி விசுவாசித்தீர்கள்? ஆரியருக்கு கேட்டதை கொடுப்பதைதானா விசுவாசித்தீர்கள்? அப்புலிங்கமாம்! அதிலுள்ள அதிசயங்கள் ஜலமூறிக் கொண்டேயிருக்கின்றதாம். மூலஸ்தானத்துக்கு மேல்புரம் தெப்பமொன்றிருக்கிறது. இரண்டிடங்களுக்கும் சுமார் 10 அடி ஏற்றத்தாழ்ட்சியுள்ளது. தெப்பத்திலிருந்து லிங்கத்துக்கு தண்ணீருறும்படி முன்னமே செய்து வைத்த ஆரிய தந்திரத்தை இப்பொழுதுள்ளஸ்தானீசுர் முதலாய் மறந்து போய்விட்டார்கள். சமீபத்தில் இடித்து கட்டிய காலத்தில் மேல் பக்கத்து சுவரை வானம் தோண்டி கான்கிரீட் பலமாய் கட்டியதால் நீருற்று நின்று விட்டது. என்ன லிங்கம், எங்கே போயிருக்கின்றார்! உடனிருந்து செலவிட்டு கட்டிய மஹா புண்ணியவான்களே தெரியாமல் நின்று விழிக்கும் பொழுது மற்றாரை நொந்து கொள்வதில் என்ன பிரயோஜனம்? இன்னும் பரங்குன்றமென்றது அந்த அடையாளமுமிருக்கின்றது. சிலகாலம் விஷ்ணு கோவிலாயி ருந்த அடையாளமுமிருக்கின்றது. தற்காலம் சுப்பிரமணியர் முளைத்திருக்கிறார். இன்னும் எவனை புதைத்துக் கொண்டு திண்டாடுகின்னோமோ தெரியவில்லை. இந்த பயித்தியங்க ளெல்லாம் விட்டு எந்த காலம் முன்னுக்கு வருவோமோ அறிவாளிகளே கவனியுங்கள்.

ஒரு பிரபலஸ்தன் வந்துபுதைத்த இடத்தில் ஆரியர்கள் கூடிப் பெரிய கட்டடங்களை கட்டும்படி ஏமாளியரசர்களை ஏய்த்து கம்மியர்களால் விக்கிரங்களை வார்த்தும் அடிப்பித்தும் வைத்துக் கொண்டு தாங்களே பூசாரிகளாக யேற்பட்டு வரும் காணிக்கைகளை யெல்லாம் விழுங்கி விட்டு, நரரீக்கிரக பிரவேசராய் வேண்டிய சுகத்துடன் இருக்கின்றார்கள். நாமோ ஏமாளிகளாய் அரை வயிறும் கால் வயிறுமாக சாப்பிட்டு மீந்ததை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு தூங்குகின்றோம். கடவுளா? கல்லா?

எவரேனும் கொஞ்சம் விபரந்தெரிந்தோர் அய்யா இதென்ன கல்லை நட்டு வைத்துக் கொண்டு சுவாமி என்கிறீர்களே! கும்பிட பணமும் கேட்கின்றீர்களே. சுவாமியென்றால் எனக் கல்லவா கொடுக்கும்? என்னிடத்தில் வாங்கி பிழைப்பது பயித்தியக் காரனாக்கி பார்வைக்குதான் கல்போலத் தெரியும், அதிலே யிருக்கின்ற உருவென்ன சாமான்யமானதா? பஞ்சாக்ஷரம் பீஜாக்ஷரம் அஷ்டாக்ஷரம் இன்னும் எத்தனையோ மந்திரம் ஏறி ஜோதி சொரூபமாய் பிரகாசிக்கின்ற தாவது தெரியவில்லையா? மந்திர சக்தி என்ன சாமான்யமானதா? அப்படியில்லையானால் இத்தனை அபஷேகங்களையும் இத்தனை நிவேத்தியங்களையும் சாதாரணமான கல் தாங்குமா? வென்று சாங்கோப சாங்கமாய் பேசி வாயெடுக்க வொட்டாமல் செய்து விடுகின்றார்கள். அதிலும் என்போல வாயாடி உங்களூருவும் மந்திரமும் ஏறியதற்கு இதுதானாசாக்ஷி? இதை யார் ஒப்புக் கொள்வார்? முன்னேறிய உருவுடன் இன்னும் ஏற்றிக் கொண்டே நீங்களுக பக்கத்தே இருங்கள் நான் ஒரு கட்டப் பாறையினால் அக்கல்லின் தலையில் ஓங்கி அடிக்கின்றேன். அதனை தடுக்க அக்கல்லுக்கு சக்தி ஏற்பட்டாலல்லவா சரி? ஒரு வேளை இது கலிகாலம். அப்படியெல்லாம் வரமாட்டாதென்பீர்கள். போகட்டும் அக்கல்லாவது உடைந்து போகாமலிருக்குமா? விடாது படித்தால் ரிஷி மூலம் நதி மூலங்களை விசாரிக்கப்படாதென்று பழைய கந்தபுராணம் கூறுகின்ற தென்கிறார்கள். இது நிற்க புதைக்கப்பட்டவன் மீனாட்சி மகனாகிய உக்ர வீரபாண்டியன் என்ற சுப்பிரமணியன்றானே. தனக்கே சந்ததி யில்லாமல் இரண்டு பத்தினிகளை கட்டியும் பின்னும் காணாமல் பழைய தந்திரிகள் நட்டு வைத்த காளி கோவிலண்டையே காத்திருந்தும் பாரிகளிம்சை பொறுக்க மாட்டாமல் சந்யாசம் பூண்டும் படாத பாடெல்லாம் பட்டு இறந்து போனவன் தானே. இஃதாரறியார்? உயிரோடிருக்கும் போது தன்னை ரக்ஷித்துக் கொள்ள மாட்டாமல் இத்தனை பாடுபட்டவன் செத்து பல்லாண்டவன்றபின் ஆரிய தந்திரிகளால் அடித்து வைக்கப்பட்ட கல்லில் நுழைந்து கொண்டு நம்மை ரக்ஷிப் பானாக்கும்! என்ன அறிவு? நாமும் மனுஷ ஜென்மந்தானோ? நம்மைப் போல மனிதன் தானே ஆரியன். இப்படியெல்லாம் ஏமாற்றி சகஜீவியாய் வசிக்கின்றான் அல்லவா? என்றால் அவர்களால் என்ன இருக்கிறது. பாடல் பெற்ற ஸ்தலமல்லவா என்கிறீர்கள். பாடல் பெற்றதுதானே பொய் என்பதற்கு போதுமான சாக்ஷி கூறும் உண்மையுள்ளவனை உண்மையுள்ளவன் என்று சாக்ஷிகளும் ரிகார்டுகளும் செய்து வைக்க வேண்டுமா? ஐயோ! பேதை ஜனங்களே மூளையை தின்று விட்டீர்களா? ஒவ்வொன்றையும் கவனித்துப் பாருங்களேன்.

இஃதிருக்க பழனியில் மச்சகாவடி, சர்க்கரை காவடி, கதை கேட்டதில்லையா? சாவடி எடுத்துச் செல்வோன் கொண்டு போயங்கொரு மண்டபமிருக்கின்றது. அதிலிறக்கி வைத்துவிட வேண்டியது. சுவாமி யுத்தாவானபின் வாவென்றனுப்பிவிட்டு திரையை போட்டு விடுகிறார்கள்.

இராமேசுவர தீர்த்த மோசடி

ஆரிய தந்திரிகள் திரையுட்சென்று காவடியை அவிழ்த்து மணலுக்கு சர்க்கரையையும், கரிமீனுக்கு உயிர்மீனும் வைத்து மறுபடியும் கட்டிவிட்டு உத்திரவாய் விட்டது ஓடிவா? என்று ஓலமிட்டு பேமாயாண்டியின் தோளில் தூக்கி வைத்தோட்டு கின்றார்கள். நடந்த வேலை என்னவென்று கவனிப்பாரைக் காணோம். சர்க்கரை இருந்தது. மீன் துள்ளினது. கொண்டுவந்த பணத்தை கொட்டடா கொட்டு, என்று கொடுத்துவிட்டு வந்தால் எப்படி பிழைப்போம்! எந்நாள் முன்னுக்கு வருவோம். இன்னும் ராமேஸ்வர மென்னும் பாழாழியின் சரிதம் தெரியுமா? மந்திரமில்லை; தந்திரமில்லை; சமுத்திரக்கரையின் பக்கமுள்ள தண்ணீர் கிடங்குகளுக்கு இராமதீர்த்தம்; லக்ஷ்மண தீர்த்தம்; அனுமார்தீர்த்தம் என்று கணக்கிலடங்கா பெயரிட்டு உப்பு தண்ணீரில் மூழ்கடா முழுகு; உங்களப்பனுக்கு உள்ளதை கொட்டடா கொட்டு உள்ளது உரியதை கொடுத்துவிட்டு திரும்பி பாராமல் ஒடடாஓடு என்று வழிப்பறி செய்த சாடையாக ஜனங்களை ஏமாற்றி கூட்டி வந்தவருக்கு பாதி; தங்களுக்குப் பாதியாய் பங்கிட்டு பிழைக்கிறார்கள். எதை சொல்வது; எவரை நோவது? ஐயோ பாவிகள் உயிரோடுதான் இருக்கின்றீர்களா? நடைபிணமாய் அலைகின்றீர்களா? எனக்கு ஒன்றும் தெரிய வில்லையே? இன்னும் ஆகாய லிங்கமொன்று ஒன்று இருக்கிறது. அங்கு செய்வதோ அரைப்பாவாடை, கால்பாவாடை, மூக்கால் பாவாடை, முழப் பாவாடையென்றேய்த்து ஆயிரக்கணக்காய் அபகரிக்கின்றார்கள். பொருள் கொடுத்தோரையும் பலனோ காலித்திரையொன்று கட்டியிருக்கின்றது. திறந்து பார்த்தால் ஆங்காங்கு நட்டிருக்கும் கல்லையும்கூட அங்கு காணோம். தனி ஆகாயந்தான் இருக்கின்றது. இதைப் பார்க்க ஜீவாதாரமாக இருந்த இத்தனை பணத்தையும் செலவிட வேண்டும்.

ஐயோ! ஏழை ஜனங்களே! ஏக வெளியில் நின்று கொண்டு யாதொரு செலவில்லாமல் அண்ணாந்து பாருங்களேன்! ஆகாயம் முழுவதும் தெரியுமே. என்னமதி! எந்நாட்கதி! இது யார் தலைவிதி! இன்னும் கழுக்குன்ற மென்றொன்றிருக்கின்றதே. அதையும் கவனியுங்கள். ஆங்கிரண்டு கழுகுகளுக்கு இரை கொடுத்து காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்.அதுவும் வேளைக் கிரமப்படி வந்து தின்றுவிட்டு போகின்றது. ஒவ்வொரு வேளை களிலே வராமலும் போகின்றது. இதிலென்ன அதிசயமென்று பணத்தை கொட்டுகின்றீர்கள்? கழுகும் ஒருவகை கோழியின் இனந்தானே கோழி வளர்க்கும் வீட்டில் இரை வைக்கும் பெண்களைக் கண்டவுடன் ஓடி வருவதும், காலை காலை சுற்றுவதும் வைத்தவுடன் தின்பதையும் பார்த்தில்லையா?

பார்ப்பனர் அடிக்கும் கொள்ளை

அய்யோ! ஜனங்களே, நம்மிடமே குங்குமம் மணங்கு ஒன்றுக்கு ரூபாய் ஆறு வீதமும், விபூதிபடி ஒன்றுக்கு ஒரு அணா வீதமும் வாங்கிப் போய் அதை மறுபடியும் நமக்கே ஒரு குண்டுமணி எடை விபூதியையும், ஒரு குண்டுமணி எடை குங்குமத்தையும் வைத்து அரை ரூபாய்க்கு விற்று முதல் செய்கின்றார்கள். இதில் ஏற்படக் கூடிய லாபத்தை பார்த்தீர்களா? நாம் ஒரு ரூபாய்க்கு 1 அணா சம்பாதிப்பது எவ்வளவோ கடினம். ஆரிய தந்திரிகள் யாதொரு சிரமமின்றி ஒரு ரூபாய்க்கு 170 ரூபாய் வீதம் நாளடைவில் இதை விற்று சம்பாதிக்கிறார்கள். (1000 ரூ. எடை குங்குமம் விலை ரூ.6-0-0) நம்மிடம் விற்கும் ஒரு குண்டுமணி எடையின் விலையை கவனித்து பாருங்கள். இதைப் போன்ற லாபம் இவ்வுலகத்தில் யாராவது அடைந்ததாய் கேள்விப்பட்டி ருக்கிறீர்களா? இவ்விதம் குங்குமத்தை நாம் மணங்கு 1-க்கு 6 ரூபாய்க்கு விற்று அதை மறுபடியும் நாமே மணங்கு ஒன்றுக்கு 1000 ரூபாய் கிரயத்துக்கு வாங்கினால் நாம் எந்த காலம் பணத்தை சம்பாதித்து முன்னுக்கு வருவோம்?

சிரார்த்தக் கொள்ளை

இன்னும் எத்தனை மோசம்! எத்தனை தந்திரம்! எதற்குத் தப்புவது? கோர்ட்டெல்லாமவர்கள்; நாடெல்லாம் அவர் வைத்த கண்ணி. அதிகாரஸ்தானமெல்லாம் அவர்கள் பார்த்த விடமெல்லாம் படுகுழி, ஐயோ! ஏழை ஜனங்கள் எப்படி கரையேறும்? திதியாம்; சிரார்த்தமாம்; திவசமாம்; நமது பிதாக்களிறந்து மோட்ச லோகத்தில் தொங்குகிறார்களாம். பசி பொறுக்க முடியாமல் இவர்களிடத்தில் சொல்லியனுப்பினார் களாம். அதற்காக நம் பிதுர்க்கள் இறந்த தேதியன்று ஆரியற்கு அரிசி, நெய், பருப்பு, உளுந்து மற்றும் காய்கறி சாமான்களும் சுமக்கு மட்டும் கொடுத்தால் இறந்தோர் பசி தீர்ந்து திருப்தியாவார்களாம். என்ன மதியீனம்! யார் சாப்பிடுகின்றது! யார் பசியடங்குகின்றது! உமக்கென்ன உணர்ச்சியில்லையா? யாராவது சோதித்துப் பார்த்தீர்களா? ஐயரை ஒரு அறையில் அடைத்து வைத்துக் கொண்டு மேற்படி யார் மகனையே திதிகட்கு தலைவனாக்கி மற்றொரு பிராமணனுக்கு வேண்டிய சாப்பாடு போடும்படி செய்து சில வாரங்கள் சென்று அடைபட்டவரை திறந்து விட்டு திருப்தியாயிருக்கிறதா என்று கேட்டால் அல்லவா சிரார்த்த மகிமை வெளியாகும்? பின்னை எப்படி தேசத்தில் ஆராய்ச்சியின் குணம் பரந்து உண்மை வெளியாகும். அறிவாளிகளே! வேதத்தை மாற்றார் பார்க்கப் படாதென்று வைத்த சட்டம் உங்கள் புத்திக்கு சரியாக இருக்கின்றதா? ஆனாலும் இவைகளையெல்லாம் முற்றிலும் கலைந்துவிட வேண்டுமென்ற தென் கருத்தன்று. வீண் மயக்கம் கொள்ளாமல் தேசம் நாகரிகமடைந்து முன்னுக்கு வரும் வழியைத் தேட வேண்டும் என்பதே என்னோக்கம். இப்பொழுது நான் சொல்லியவைகளைக் கவனித்துக் கொண்டு வந்த ஆரியர்களெல்லாம் என்னென்னவோ நயன பாஷையில் பேசிக் கொண்டு வருகின்றார்கள். என்ன செய்தாலும் செய்யட்டும் உண்மையைத்தான் பேசுவேன். இதோ பரங்குன்றம் ஸ்டேஷன் வந்து விட்டது. அநேகமாய் எல்லோரும் இறங்கி விட்டோம். ஊருக்குட் செல்கின்றேன். இந்நேரம் தாழ்ந்தது. ஆரிய தந்திரம் பலமாய் நடந்தது. பழைய வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

-------------------------- "திராவிடன்" 30.7.1917

சுரன் என்றால் சுரா எனும் மது அருந்துபவன் - அசுரன் என்றால் சுராபானம் அருந்தாதவன்



ஓணமே; ஓர் உதாரணமல்லவா?


காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியான கடற்கரை நகரம் மாமல்லபுரத்தை மகாபலிபுரம் என்றே நமது மகா ஜனங்கள் அழைத்துப் பழக்கப் பட்டு விட்டனர். நானும் எத்தனையோ முறை எழுதியும் பேசியும் விளக்கியிருக்கிறேன்; காஞ்சியை ஆண்டிருந்த மகேந்திர வர்மனின் மகன், நரசிம்ம வர்மன் மற்போரில் வல்லவன் என்பதால் அந்தப் பல்லவ மன்னனுக்கு மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அந்தப் பெயர் விளங்கத்தான் மாமல்லபுரம் என்ற பெயர் பூண்டு அந்தச் சிற்ப நகரம் திகழ்கிறது என்பதை வரலாற்றுச் சான்றுகளை எடுத்துக்காட்டி எத்தனை முறைதான் நினைவுபடுத்துவது! பயனில்லை - பயனில்லை - பயனே ஏற்படப் போவதில்லை! பழைய புராணங்கள் - பழக்க வழக்கங்கள் - புதிய சிந்தனைக் கும் - அதில் விளையும் உண்மைக்கும் வழிவிடவே போவதில்லை.

இப்போது நான் தெரிவிக்கப் போவது அந்தப் பல்லவ மன்னன் மாமல்லனைப் பற்றியல்ல; பழைய புராணக் கதையில் சொல்லப்படும் மகாபலி என்ற அசுரச் சக்கரவர்த்தியைப் பற்றி! சுரன் என்றால் சுரா எனும் மது அருந்துபவன் - அசுரன் என்றால் சுரா பானம் அருந்தாதவன் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டிருப்பதை மறந்து விடலாகாது. அசுரர்; அவுணர் எனவும் அழைக்கப்படுவர். இந்தக் கூற்றுக்குத் தமிழ் அகராதியும் தக்க சான்றாகும்.
அவுணர்க்கு நாயகனாக விளங்கியவன் மாவலி மன்னன் என்று நாலாயிரப் பிரபந்தம் நயவுரையில் வைணவச் செம்மல் எனப்படும் டாக்டர் ஜெகத்ரட்சகனே குறிப்பிடுகிறார். அவர் மாவலியைப் பற்றி வர்ணித்துள்ள வாசகத்தில் அவுணர்க்கு நாயகன், மிக்க பெரும் புகழ், நீள்முடி வெந்திறல் மாவலியின் மங்கலம் சேர் பெரு வேள்வி எனச் சிறப்பிக்கின்றார்.
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் எனும் பண்டிகையைப் பற்றியும் அதன் காரணம் பற்றியும் - முன்பொரு முறையே சொல்லியிருக்கிறேன். மக்களுக்கு மறதி அதிகமென்பதால் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.

திருமதி பாத்திமா பீவி அவர்கள் தமிழக ஆளுநராக இருந்த போதும் நான் முதலமைச்சராக இருந்தேன். அந்த அம்மையார் கேரளத்துக்காரர் என்பதால் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை கவர்னர் மாளிகையில் சிறப்புறக் கொண்டாடுவார்.

ஓராண்டு; பண்டிகைக்கு என்னையும் முதல்வர் என்ற முறையில் அழைத்திருந்தார். நானும் அமைச்சர்களுடன் சென்றேன் - அந்த விழாவில் இசைமேதை ஜேசுதாஸ் இசை நிகழ்ச்சி - கவர்ந்திழுப்பது மட்டுமல்ல; கேட்போரின் கவலைகளையும் போக்க வல்லது; மனத்துயரை மறந்திடச் செய்வது அவரது இசையல்லவா!

அந்த இசை நிகழ்ச்சியில் அழகாக அச்சியற்றப் பெற்ற மிகச் சிறிய அளவிலான புத்தகம் ஒன்று விழாவினையொட்டி வெளியிடப்பட்டு நூற்றுக் கணக்கில் விநியோகிக்கப்பட்டது. ஆங்கிலத்தில், மலையாள மொழியில், தமிழில் எழுதப்பட்டிருந்த அந்தக் குறள் வடிவிலான சிறு நூலில் ஓணம் பண்டிகைக்கான காரணம் விளக்கமாகக் கூறப்பட்டிருந்தது.

மலையாள ராஜ்யத்தை மாவலி என்ற மாமன்னன் ஆண்டு வந்தான். அவன் ஆட்சிக் காலம் மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அவனை அப்படியே விட்டுக் கொண்டிருந்தால், இன்னும் பல சாதனைகளைச் செய்து சரித்திர புருஷனாகி விடுவான். ஆகவே அவனை இப்போதே ஒழித்திட வேண்டும். ஒழித்தால்தான் பூ தேவர்கள் எனப்படும் பூசுரர்கள் வாழ முடியும் என்று மகாவிஷ்ணு விடம் சென்று முறையிடு கிறார்கள். அதைக் கேட்ட விஷ்ணு; வாமனாவதாரம் எடுத்து அடியளந்திடும் வஞ்சக சூழ்ச்சியால் மாவலி மன்னனை மண்ணோடு மண்ணாகும்படி வதைத்து விடுகிறார். நல்லவன் ஒருவன் ஆட்சி நடத்துவதும் - அவன் நல்ல திட்டங்களை மேலும் மேலும் தொடர்வதும் பிடிக்காமல் பூசுரராம் தேவர்கள் அவனை வீழ்த்தி விட்டார்கள். உயிர் விடும்போது அந்த மாவலி மன்னன், மகாவிஷ்ணுவிடம் கேட்ட வரம்தான்; அவன் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடுவதாகும்.

எனவே ஆளுநர் மாளிகையில் பாத்திமா பீவி அவர்களால் நடத்தப்பட்ட அந்த ஓணம் பண்டிகை - ஒரு நல்ல விஷயத்தை; அதாவது நமது இனத்தை எப்படியெல்லாம் சூழ்ச்சியினால் தீர்த்துக் கட்டி; அதை திருவிழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்ற உண்மையை எனக்கு உணர்த்திட உதவிற்று!

மேலும் இதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டுமென்ற ஆர்வ மிகுதியால் நான் தேடிய போது அண்மையில் கிடைத்தது தான் festivels of india - என்ற புத்தகமாகும். இந்து பண்டிகை களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய நூல் அது.

அதில் ஓணம் பண்டிகையைப் பற்றிக் குறிப்பிடும்போது; மாவலி மன்னனைப் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.
“A great and wise Asura King named Mahabali ruled over Kerala. His subjects loved him very much. He had become very powerful and had brought the earth. This worried the Gods who requested Lord Vishnu to help them

(இதன் தமிழாக்கம் :- மகாபலி என்ற பெயர் கொண்ட ஒரு சிறந்த - அறிவுக் கூர்மை மிக்க மன்னர் கேரளத்தை ஆண்டு வந்தார் . அந்த நாட்டுக் குடி மக்கள் அவரை பெரிதும் நேசித்தனர். அவர் மிகவும் சக்திவாய்ந்த மன்னனாக விளங்கினார். உலகம் முழுவதையும் தன் குடையின்கீழ் கொண்டு வந்தார். இதைக் கண்டு கடவுள்களாம் பூ தேவர்கள் மிகவும் துயரமடைந்தனர். அவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.)

இது மட்டுமல்ல; மலையாள மனோரமா என்ற பிரபல ஏடு வெளியிட்டுள்ள ஓணம் பற்றிய சிறப்பு இதழில், “Accordng to legend, long ago, a kind and wise king, Mahabali, ruled what is now Kerala. His rule was considered as a golden era, and joy and prosperity over flowed. The Gods grew very jealous of him, so, they asked Lord Vishnu to help them”

(இதன் தமிழாக்கம்: - புராணத்தின்படி, மகாபலி என்ற அன்பும், அறிவுக் கூர்மையுமிக்க மன்னர் நெடுங்காலத் திற்கு முன்பு கேரளத்தை ஆண்டு வந்தார். அவருடைய ஆட்சிக் காலம் பொற்காலமாகக் கருதப்பட்டது.அவர் ஆண்ட போது வளமும் மகிழ்ச்சியும் கொழித்தது. கடவுள்கள் இதைக் கண்டு பொறாமை யடைந்து மகா விஷ்ணுவின் உதவியை நாடினர்)
இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.


உடன்பிறப்பே; நான் காட்டியுள்ள இந்த ஆதாரங்களில் இருந்து; சுரன் அல்லாத ஒருவன் நல்லாட்சி நடத்தி, அவனால் ஆளப்படுகிற மக்களால் போற்றிப் புகழப் படுவானேயானால் - அவன் வேறு இனத்தவன் - இழிகுலத்தவன் - இவனை வளர விடுவது பெரும் ஆபத்து என்று முடிவு செய்து அவனுக்கே முடிவு கட்ட ஒரு கூட்டம் மாவலி மன்னனையே எதிர்த்துக் கிளம்பியது போலக் கிளம்பும் என்பதற்கு; இதைவிட வேறு சான்று தேவையில்லை அல்லவா?

ஓணம் பண்டிகை உதாரணம் ஒன்றே போதுமல்லவா?

---(மு.க.)

---------------- நன்றி: "விடுதலை" 28-9-2008

27.9.08

பெரியார் பணக்காரர்களின் ஏஜெண்டா? மேட்டுக்குடி மக்களின் பாதுகாவலரா? - திரிபுவாதத்துக்கு சம்மட்டியடி!







தந்தைபெரியார் ஓர் இமய மலை; அந்த இமயமலையை இன்றைக்குச் சில எலிகள் தங்கள் வாலால் அளக்க முயலுகின்றன. தலைமுறைத் தலைவர் பெரியார் ஒரு நைல் நதி; அந்நதியை இன்றைக்குச் சில மீன்கள் தங்கள் செதில்களால் அளக்க முயலுகின்றன. அறிவு ஆசான் பெரியார், ஒரு பெரு நெருப்பு; அந்நெருப்பினைச் சில கட்டெறும்புகள் தங்கள் கால்களால் எடை போடத் தொடங்கியிருக்கின்றன. உயராய்வு மய்யங்களும் அறிவுலக மேடைகளும் ஆராய வேண்டிய பகுத்தறிவுப் பகலவனை, டீக்கடை பெஞ்சுகளும் திண்ணைப் பேச்சுகளுமா எடை போடுவது?

பொது வாழ்க்கையில் நகக் கண்ணில்கூட அழுக்குப் படியாமல் வாழ்ந்தவர் பெரியார்: அவருடைய தாடிமுடிகளில் கூடப் படிகத்தின் பரிசுத்தம் உண்டு. பெரியாருடன் சில ஆண்டுகள் பழகியதாலும், அவருக்குக் கீழ் பணியாற்றியதாலுமே, பெரியாரை முழுதாக உணர்ந்து கொண்டேன் எனச் சொல்லிவிட முடியாது. கடற்கரையின் ஒரு பக்கத்தில் நிற்பவன், மறு கரையைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்? ஒரு புறத்தில் காற்றின் ஈரப்பசையை உணர்ந்தவன், அதன் மற்ற பக்கங்களைப்பற்றி எப்படிச் சொல்ல முடியும்?

கோவை அய்யாமுத்து அவர்கள் தந்தை பெரியாருக்குக் கீழ் காங்கிரஸ் கட்சியிலும், குடிஅரசு பத்திரிகையிலும் பணியாற்றியது உண்மை. அய்யாமுத்து இயல்பூக்கங்களால் உந்தப்பட்டு, உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போனவரே தவிர, கொள்கைவயப்பட்டுக் குன்றென நின்றவர் அல்லர் என்பதை, அவருடைய சுயசரிதையைப் படிப்பவர்கள் உணர்வர். அப்படிப்பட்டவர் அய்யாவின் மேலாண்மைத் திறத்தை நேரில் கண்டு, மெய்மறந்து நிற்கிறார்.

திருப்பூரிலிருந்த தமிழ்நாடு காதிபோர்டின் தலைவராக ஈ.வெ.ரா. இருந்தார். க. சந்தானம் அதன் காரியதரிசி. தெருத் தெருவாய் கதர் சுமந்து கொண்டுபோய் விற்பதற்கு அய்யாசாமியும் நானும் நாயக்கரிடம் கதர் கடனாகக் கேட்டோம். அவரா கடன் கொடுப்பார்? 500 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துக் கதர் வாங்கி வந்தோம்...

நாயக்கர் ஒரு சிறந்த உழைப்பாளி. அவரது அயராத உழைப்பும் ஊக்கமும் எங்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தன. சோறு, தண்ணீர், உறக்கம் ஆகியவற்றை அவர் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை. எந்த இடத்தில் எது கிடைத்ததோ அதைச் சாப்பிட்டு விட்டுத் தெருவிலோ, திண்ணையிலோ, மரத்தடியிலோ, எங்கு வேண்டுமானாலும் அவர் துப்பட்டியை விரித்துப் படுத்துறங்கினார். நாயக்கர் ஒரு கர்மயோகியாகவும், தன்னலமற்ற தியாகியாக வும் விளங்கினார் என இரத்த சாட்சியாக எழுதுகின்றார்
(எனது நினைவுகள்: பக்.205-206) அய்யாமுத்து


பொது வாழ்க்கையில் நேர்மையும், நாணயமும் பெரியாருக்கு இரண்டு கண்களாய் அமைந்தவை. குடிஅரசு பத்திரிகையில் அய்யாமுத்துவைப் பெரியார் அவர்கள் எவ்வளவு மரியாதையோடு வைத்திருந்தார் என்பதற்கு அய்யாமுத்துவின் நினைவுக் குறிப்புகளே போதுமானது. ஒரு நாள் பகல் குடிஅரசு காரியாலயத்தில் கண்ணப்பரும் நாயக்கரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். நாயக்கர் வந்திருக்கிறார் என்பதை ஆபீஸ் பையன் மூலமாக அறிந்த என் மனைவி, எப்போதையும் விடக் கொஞ்சம் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருந்தாள். அய்யாமுத்து தனது யோக்யதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார் எனக் கண்ணப்பரிடம் நாயக்கர் கூறியது என் காதில் விழுந்தது.. உடனே சாவிக்கொத்தை நாயக்கரின் மீது வீசி எறிந்துவிட்டு, உங்கள் குடிஅரசு பணத்தில் கறியும் மீனும் முட்டையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்குப் பிரியமில்லை. புஞ்சைப் புளியம்பட்டிக்குப் போய் எப்போதும் கம்பங்கூழ் குடிக்கப் போகிறேன் எனும் அய்யா முத்துவின் வாக்கு மூலமே (பக்.259-260) பெரியாரின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுவதாகும். கம்பங்கூழ் சாப்பிடுபவரை, கறியும் மீனும் முட்டையும் சாப்பிட வைத்து, பெரியாரின் சமத்துவ உணர்வைக் காட்டாதா?

அய்யா அவர்கள் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், குடிஅரசு பத்திரிகையின் கணக்கு வழக்கைச் சரியாக வைக்காத காரணத்தால், ஒரு தமிழறிஞரையே வீட்டுக்கு அனுப்பினார் எனும் செய்தி நடுத்தெரு நாராயணன்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்!

பெரியாரிடத்திலேயே குருகுலவாசம் செய்த சாமி ஒருவர் கடைசி காலத்தில், தடம் புரண்டு, பெரியாரிடம் இவ்வளவு சொத்து இருக்கிறது என்று வருமான வரித்துறைக்கு எழுதிவிட்டார். அதற்குத் திருவல்லிக்கேணி கூட்டத்தில் பதில் சொல்ல வந்த பெரியார், என்னிடம் இருக்கின்ற சொத்தை ஏன் குறைத்துச் சொன்னாய்! நீ சொன்னதை விட இத்தனை இலட்சங்கள் அல்லவா என்னிடம் அதிகமாக இருக்கின்றன. நாடு, அதனை எடுத்துக் கொள்வதாக இருந்தால் எடுத்துக் கொள்ளட்டுமே! என் குடும்பத்துக்காகவா வைச்சிருக்கேன்; நீ ஏன் அயோக்கியத்தனமா குறைச்சுச் சொல்றே என்றாரே, இந்தக் கண்ணியத்தை உலகத் தில் எந்தத் தலைவரிடம் காண முடியும்?


பெரியாரின் மனிதநேயத்திற்கு அய்யாமுத்துவைக் காட்டிலும் வேறு யாரும் பட்டயம் தீட்ட முடியாது. அய்யாமுத்து அவர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, சட்டத்தின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு கிடந்த நேரத்தில், அய்யா அவர்கள் அவரைத் தேடிச் செல்கிறார். சென்னையோடு நாயக்கருக்கும் எனக்கும் இருந்த உறவு அற்றுப் போயிருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தேன். நாயக்கர் என் போன்ற சின்ன மனிதர் அல்லவே! அவர் சொற்பமான வரும் அல்லவே! பெரியார் அல்லவா? பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க்கும்மே எனச் சும்மாவா பாடினான்! இராமசாமிப் பெரியார் என்னைத் தேடிக் கொண்டு ஒரு நாள் புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்த எனது கதர்க்குடிசைக்கே வந்து விட்டார். வாருங்கள்! வாருங்கள்! என ஆனந்தக் கூத்தாடி எழுந்து நின்று அவரை வரவேற்றேன்.
நாயக்கர் அகஸ்மாத்தாக அங்கு வரவில்லை; தற்செயலாகவும் அந்தச் சந்திப்பு ஏற் படவில்லை. ஈரோட்டைவிட்டுப் புறப்படும் போதே என்னைப் பார்க்க வேண்டும் என்று புரோகிராம் போட்டுப் புறப்பட்டிருக்கிறார். ஈரோட்டில் நிகழவிருக்கும் சுயமரியாதை மாநாட்டில் நான் பங்கு பெற வேண்டும் என்றார். நான் கதர்க்கடையில் கட்டுண்டுக் கிடக்கின் றேனே என்றேன். மாநாட்டுப் பந்தலில் டிக்கெட்டுகள் விற்கும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்க வேண்டும். நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். அந்த வேலைக்குப் பொறுப்பான ஆள் உங்களைத் தவிர வேறு யாரும் என் கண்ணில் படவில்லை என்று பேச்சை முடித்தார். அந்தப் பெரிய மனிதரே கையைப் பிடித்து அழைக்கும் போது எப்படி மாட்டேன் என்று சொல்வது?
என அய்யாமுத்துவே (ப.267 -268) அய்யாவின் தோழமை உணர்வுக்குச் சாசனம் தீட்டும்போது, நடுத்தெருவிலே இருப்பவர் கள் ஊளையிட்டு என்ன பயன்?


தந்தை பெரியார் ஏதோ பணக்காரர்களின் ஏஜெண்டு போலவும், மேட்டுக்குடி மக்களின் பாதுகாவலர் போலவும் சித்தரிக்கத் துடிக்கும் நூலோர்கள், அய்யாமுத்து வின் எழுத்துகளை மறுவாசிப்பு செய்துவிட்டு, மனசாட்சியோடு யோசித்துப் பார்த்தால், பெரியார் ஒரு வரலாறு காணாத சமூகப் பேராளி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அய்யாமுத்து அவர்களின் மதிப்பீட்டிலும் தமிழினத்தின் கணக்கீட்டிலும் தந்தை பெரியார் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் என்பதை அவருடைய நினைவுக் குறிப்புகளைப் படித்தாலே தெற்றெனப் புலப்படும். உப்புச் சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்தபோதே, சுயமரியாதை மாநாடும் நிகழவிருந்தது. தோழர் ஜீவானந்தம் அவர்கள் அப்போது, சுயமரியாதை மாநாட்டை ஒத்தி வைத்துவிட்டு, அனைவரும் உப்பு சத்தியாக்கிரகத்திற்கு வருவதற்கான ஒரு தீர் மானத்தை மாநாட்டில் முன்மொழிந்து பேசவிருந்தார். தோழர். ஜீவா அவர்கள் ஓர் ஆற்றல் மிக்க பேச்சாளர் என்பதை நன்கறிந்த பெரியார் அவர்கள், கோவை அய்யாமுத்துவைச் சந்தித்து, அரசியல் விடுதலைக்குக் காந்தியார் பாடுபடட்டும்: அதை நாம் ஆட்சேபிக்க வேண்டாம். சமுதாய விடுதலைக்கு, முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு நாம் பாடுபடுவோம். தீண்டப்படாத மக்கள் கோயில் குளங்களில் பிரவேசிப்பதற்காக, நாம் சிற்சில இடங்களைத் தேர்ந்தெடுத்துப் போராட்டம் துவங்குவோம். நமது இயக்கத்தில் தீவிரமாக உள்ள ஊழியர்கள் ஏற்ற அளவில் இல்லை. அந்த நிலையில் நாம் காங்கிரஸ் துவங்கியுள்ள போராட்டத்தில் கலந்து கொண்டால், நமது இயக்கம் அத்தோடு முடிந்து விடும் என்று எடுத்துரைத்தார்.
நாயக்கரின் நம்பிக்கை பாழாகக் கூடாது என்று நானும் ஜீவாவின் தீர்மானத்தை, எதிர்த்துப் பேசித் தோற்கடித்தேன் (பக்.269-270) என வாக்குமூலம் தருகின்றார் அய்யாமுத்து!


வரலாற்று உண்மைகள் இவ்வாறிருக்க, பன்றிகள் தின்பதற்காகவே மலத்தைத் தள்ளுகின்ற சில பேனா முனைகளை என்ன செய்யப் போகின்றீர்கள்? இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டுக்கோட்டையார் பாடியது, இன்று எவ்வளவு பெரிய நிதர்சனமான உண்மையாயிற்று! தந்தை பெரியார் ஒரு சீனச் சுவர்! அதனை எத்தனை எலிகள் சுரண்டினாலும், அவற்றின் பல்லுடையுமே தவிர, அச்சுவற்றின் கல்லைக் கூடப் பெயர்க்க முடியாது. தந்தை பெரியார் ஒரு கலங்கரை விளக்கம்! அதன்மீது காகங்கள் கழியலாம்; ஆனால், அதன் ஒளி வீச்சை எந்தக் காகத்தினாலும் மறைத்து விட முடியாது.


------------------ தி. இராசகோபாலன் அவர்கள் 27-9-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

கடவுள், மதம், ஜாதி ஒழிந்த இடத்தில்தான் அன்பு வளர முடியும்.




வளர முடியும்...


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

------------------ தந்தைபெரியார் - "விடுதலை", 20.9.1968

பெரியார் பயணம் இன்னும் முடியவில்லை







ஒரு மனிதன் தோன்றித் தமிழ்நாட்டு மக்களிடையே வந்து தமிழா! நீ மனிதனா? என்ற வினாவை எழுப்பி! மானம் இருக் கிறதா? எனக் கேள்வி கேட்டு, சொரணை வேண்டாமா? சோற்றுப் பிண்டமாய் வாழ்வதா? நீ யார்? உன் நிலை என்ன? உன்னையே நீ அறிந்து கொள்ள வேண்டாமா? என்று தன் இனத்தவனையே விழிப்புறச் செய்யப் புறப்பட்டார் தந்தை பெரியார்! விவரம் தெரியாதவன் திகைத்தான்! விபரந் தெரிந்தவன் பெரியாரைச் சபித்தான்!


விவரந் தெரியாதவன் எண்ணிக்கையில் அதிகம்! விவரந் தெரிந்தவனோ மிக மிகக் குறைவு! ஆனாலும் அவரை புத்திசாலி பிழைக்கத் தெரிந்தவன்! விவரம் தெரியாத பெருங்கூட்டமோ, அனைத்தையும் உருவாக்கினவன் அனைத்துக்கும் அவனே உடைமையாளன்!

ஆனால் விவரந் தெரிந்தவன் எந்த உடைமைக்கும் உரியவனல்லன் பிழைக்க வந்தவன்! ஆனாலும் எப்படியோ ஏற்றம் பெற்றுவிட்டான். வலிமை பெற்று, வசதி பெற்று, ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைக்கும் திறன் பெற்றுவிட்டான்.

விவரந் தெரியாத திருப்பெருங்கூட்டம் விழியிருந்தும் குருடராய், வழி தவறித் தடுமாறி அடிமைகளாய் நடமாடும் உருவமாய்த் தத்தளித்தான். அவனைப் பார்த்துத்தான் பெரியார் ஆயிரங்கேள்விகள் கேட்டாரி. அந்த அறியாப் பெருங்கூட்டத்தையே ஆயுதமாக்கிக் கொண்டு அறிந்த சிறு கூட்டம் பெரியார் மீது தாக்கியது! அவமானப்படுத்தியது! அசிங்கப்படுத்தியது!

ஆனாலும் பெரியார் சளைக்கவில்லை, தொடர்ந்து போராடினார். அந்த அறியாப் பெருங்கூட்டம்தான் தமிழர் இனம்! அடிமைப்பட்ட இனம்! அறிந்தவனாய் இருந்த ஆதிக்கம் செய்தது ஆரிய இனம்!

இதனைத் தன்னந்தனியாய்ச் சுற்றிப் பறந்து சூறாவளியாய் வீசி போராடினார். தலைவர் கலைஞர் அவர்கள் கூறியது போல எரிமலையாய் சுடுதழலாய் தகித்தார்!

திகைத்தது ஆரியம்! அதிர்ந்தது அய்தீகம்! இந்தக் காலக் கட்டத்தில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், பெரியார் அவர்களோடு இணைந்தார். அவரது புரட்சிப் பயணத்தில் ஆட்சியாளர் துணை இல்லை! மாறாக அவர்தம் அடக்கு முறையும் அடாவடித்தனமும் தான் தொடர்ந்தது. நீதி மன்றங்கள் அழைத்தது! நீர் செய்தது குற்றம்தானே என்று கேட்டது! இல்லை அது நியாயம்? ஆகவே, நான் தொடர்ந்து செய்வேன்! என்றார். நாங்கள் உங்களைத் தண்டிப்போம் என்றார்கள். அதற்கு அவர் பார்ப்பான் ஆட்சி செய்யும் நாடும் - கடும் புலி வாழும் காடும் ஒன்றேயாகும். நான் புலி வேட்டையாடப் புறப்பட்டு விட்டேன். புலிகள் என்மீது சாய்ந்து காயப்படுத்தலாம். கவலை இல்லை! பார்ப்பன நீதிபதிகளாகிய தாங்கள் எனக்கு எவ்வளவு அதிகமான தண்டனை கொடுக்க முடியுமோ கொடுங்கள் என்று கூண்டிலே நின்று சங்கநாதம் செய்தவர் நம் தலைவர் பெரியார்.

அவர் 70 ஆண்டு காலம் தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார். நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு! அவர் இந்த பூமியில் வாழ்நாள் முழுதும் பயணம் செய்த மொத்தத் தொலைவு 8,20,200 மைல்கள். இது இந்தப் பரந்த பூமிக் கோளத்தை மூன்று முறை சுற்றி வருவதற்கொப்பாகும்! அவர் பேசிய கூட்டங்கள் 21,400. உயிர் விடுவதற்கு முதல் நாள் வரை பேசினார்! எழுச்சியுகம் காண்பதற்கு எழுந்து வாரீர்! என இளைஞர்களை அழைத்தார்!

இறுதியாக அய்யா தியாகராயர் நகரில் ஆற்றிய இறுதிச் சொற்பொழிவு அழிக்க முடியாத அறிவுச் சாசனமாகும்! அதனை மரண சாசனம் என்றே நாடு போற்றியது!

அறிவுலக மேதை அண்ணா சொன்னார்:

ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்து வெற்றி பெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை.

இதைவிட யார் மதிப்பிடத் தக்கவல்லார்?


எதையும் தாங்கும் இதயத்தை எனக்குத் தந்தார்

எத்தனையோ கருத்துகளை உரையாடல் மூலம் தந்திருக்கிறார்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்புத் தந்தார். பொதுத் தொண்டு ஆற்றுவதில் ஓர் அகமகிழ்வும், ஆர்வமும், மன நிறைவும் பெற்றிடச் செய்தார். நான் கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்.

(பெரியர் ஒரு சகாப்தம் என்ற நூலில் அறிஞர் அண்ணா)

நீ நினைக்கிற கடவுள் ஒருவனால் உண்டாக்கப் பட்டது என்கிறாயா? அல்லது ஒருவனால் கண்டு பிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது யாராலும் உண்டாக்கப்படாமல் யாராரும் கண்டுபிடிக்கப் படாமல் தானாக, இயற்கையாக கடவுள் இஷ்டப்படி கடவுளாகவே தோன்றிற்று என்கிறாயா?

நான் சொல்லுவதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால் எதற்காக வரும்? கடவுள் ஒருவானால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால் தானே! உண்டாக்கினவனை நான் முட்டாள் என்கிறேனே என்று நீ கோபித்துக் கொள்ள வேண்டும்.

மற்றும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே ஆத்திரம் வரவேண்டும்? நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீயே ஒப்புக் கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்.

அது மாத்திரமல்லாமல் நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதான் கருத்தாகிறது!

இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா- Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா-Invention) அல்லது நேச்சுரலா- (Natural) ? கடவுள் இயற்கையாகத் தோன்றியதா?

இதை முதலில் முடிவு செய்து கொள்! இவ்வாறு தந்தை பெரியார் அறிவு பூர்வமான வினாவை எழுப்புகிறார். பெரியார் கடவுளைச் சாடுவதற்குக் காரணம் அதன் மீதுள்ள கோபமோ வெறுப்போ அல்ல!

சமூக நலன் கருதியே! மக்களை அறியாமை இருளிலிருந்து மீட்டெடுக்கவேயாகும் (ஆதாரம் பெரியார் களஞ்சியம்).


அவர் திராவிட இனத்துக்காகவே கவலைப் படுகிறார்! தான் இந்த விவகாரத்தை அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக கையிலெடுத்தார் என்பதைப் பற்றிக் கவலையோடு கூறுகிறார்!

ஏனெனில் இந்த நாட்டில் பொது வாழ்வில் எல்லா மக்களையும் பொறுத்தவரையில் பொதுத் தொண்டில் சிறிதும் சுய நலமில்லாமல் சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல் உண்மையாகவே என்னை ஒரு தொண்டன், ஒரு தொண்டனுக்காகவே வாழ்பவன், வாழவேண்டியவன் என்று கருதிக் கொண்டு உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாரும் இல்லை, யாருமில்லை யென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் எனத் தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை, அதாவது நம் மக்களில் யோக்யமானவன், நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக் கூடக் காண முடிவதில்லை, இருப்பதாகக் கருதக் கூட முடிவதில்லை, என்பவனவற்றை கருதக்கூடியவனாக கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன். (பெரியர் களஞ்சியம்)

இந்தப் பகுதியைக் கழகத் தோழர்களும், சிந்தனையாளர்களும் பொறுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும்! கவலையே தன்னிடம் நெருங்கிடாத புரட்சி வீரராக போர்க்குணமே பொது வாழ்வாக அமைத்துக் கொண்ட அந்த மாபெரும் தத்துவ மேதையின் நெஞ்சச் சுமை யாரால்? எதனால்? சிந்திக்க வேண்டாமா?

இந்தக் கவலையை நெஞ்சில் சுமந்தவாறே தனது மூச்சையடக்கிக் கொண்டார்! ஆனால் அந்தக் கவலை போக்குவதே தம் வாழ்நாள் கடமையாகக் கொண்ட அவரது இலட்சியத் தொண்டர் கலைஞர்!

தந்தை பெரியார் மறைவினால் எந்த அளவு மனம் பாதிக்கப்பட்டார்! எந்த அளவு அவர் விட்டுச் சென்ற சமூகப் பணிக்குச் செயல் வடிவம் தந்தார் என்பதற்கு

அய்யா மறைந்தவுடன் முரசொலி ஏட்டில் உடன் பிறப்புக்கு எழுதிய கடிதம் இதோ...!

அன்புத் தந்தை!

உன்னையும் என்னையும் நம் இருவரையும் உடன் புறப்புகளாக ஆக்கி வைத்த நம் அருமை அண்ணனையும் அரசியலுக்கு ஈந்த நம் அன்புத் தந்தை ஓய்வெடுத்துக் கொள்ளப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

பொது வாழ்வில் புகுந்தது முதல் அவர் கண்டறியாத ஒன்றை இப்போது காண்பதென்று தீர்மானித்து விட்டார்.

எதை நினைத்து நான் வேதனைப்படுவது? இளம் பிஞ்சுப் பருவத்திலேயே என்னை நான் அவரிடத்திலே ஒப்படைத்துக் கொண்டு தன்மானத் தமிழகம் காண தலை நிமிர்ந்து நிற்கும் சமுதாயத்தை உருவாக்க அணி வகுத்து நின்ற பெரும்படையில் ஒரு துளியானேன்.

சரித்திரத் தலைவன் கடவுள், மதம், புராணம் இவைகளின் தூய்மையைப் பரப்பாமல் தீமைக்கு வித்திட்டவர்களின் கொடுமை களைவதற்காகக் குமுறிய கோடை இடி!

பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் இடிந்து போய் எழுந்த ஈரோட்டுப் பூகம்பம்! புன்னகையா? புதுக்கருத்தா? புரட்சிக்கனலா? என்ன வேண்டும்? எல்லாம் தந்தை எந்தை பெரியார் எங்கே போய்விட்டார்? அன்பின் உருவம், அறிவின் சுரங்கம், அவரது மூத்த மகன் அண்ணாவைப் பார்க்கவா?

வாழ்க்கை முழுதும் போரட்டத்திலேயே கழித்த அவர், வைர நெஞ்சன். இப்போதும் ஒரு போராட்டத்தை அறிவித்து விட்டல்லவா கண்களை மூடியிருக்கிறார்!

சிந்தனைச் சிற்பி! சிறைக்கு அஞ்சாத சிங்கம் நிந்தனைகளைப் புகழாரம் எனக் கருதிப் போர்க்கொடி தூக்கிடும் கிழப்புலி!

அய்யகோ! அந்தக் கர்ச்சனை அடங்கிவிட்டதே! முழக்கம் ஓய்ந்து போய்விட்டதே!

தமிழகம் தவிப்பு

உலகம் ஒரு சிந்தனையாளனை இழந்து விட்டது. இந்தியா ஒரு சீர்திருத்தச் செம்மலையைப் பறி கொடுத்துவிட்டது. தமிழ் நாடு தனிப்பெருங் காவலனை இழந்து தவிக்கிறது. பெரியார் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார் - நாம் தொடருவோம் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!

என்று முடிக்கிறார் நம் அருமைத் தலைவர் கலைஞர்.
ஆம்! பொரியார் பயணம் இன்னும் முடியவில்லை!

----------------------- பரமத்தி சண்முகம் அவர்கள் எழுதிய கட்டுரை -நன்றி: "விடுதலை"

சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட்டால் இதுவரை மைல்கல், ஃபர்லாங்குக்கல் எல்லாம் சாமியாகியிருக்குமே!



கடவுள் என்றால் மூடநம்பிக்கைக்கு ஆளாகக்கூடாது; ஜாதி கடவுள், அரசமரம், வில்வமரம், கல், படம், பொம்மை எல்லாம் நம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்? ஆறறிவு உள்ள மனிதனா இவ்வளவு காட்டுமிரண்டியாயிருப்பது?

கடவுள் வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்களேன். அந்தக் கடவுளுக்கு உருவம் கிடையாது, எங்கும் இருப்பார், பேர் இல்லாதவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மகமதியரும் கிறிஸ்தவரும் அப்படித்தானே வைத்திருக்கிறார்கள்? ஒரு கடவுள் என்றுதானே எல்லோரும் பேசியிருக்கிறார்கள்? நம்மவர்களும் பேசியிருக்கிறார்கள். இருந்தும் எப்படி இவ்வளவு கடவுள் உண்டாயின?

சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட்டால் இதுவரை மைல்கல், ஃபர்லாங்குக்கல் எல்லாம் சாமியாகியிருக்குமே! அவற்றிற்கு நாமம் போட்டு பொட்டு வைத்து மைலீசுவரர், ஃபர்லாங்கீசுவரர் என்றெல்லாம் சொல்லியிருப்பானே!

இந்தச் சாமிகளுக்குப் பன்றிமுகம், பாம்பு முகம் எல்லாம் எப்படி வந்தன? தோற்றமெல்லாம் குத்துகிற மாதிரி, வெட்டுகிற மாதிரி உள்ளதே; எதற்காக இந்தப் போக்கிரித்தனமான வேடம்? கடவுளுக்குப் பெண்டாட்டி எதற்காக? போதாது என்று வைப்பாட்டி, பள்ளி அறைத் திருவிழா, ஊர்வலம் வருவது, இவையெல்லாம் எதற்கு? இவற்றையெல்லாம் வெளிநாட்டிலே போய்ச் சொல்லிப் பாரேன். உன்னை காட்டுமிராண்டி என்பான்! ஒருவன் சொல்கிறான்; கிருஷ்ணன் தங்கை அண்ணனிடம் சென்று ``உலகத்திலிருக்கிற பெண்கள் எல்லாம் உன்னை அனுபவிக்கிறார்கள்; நான் அப்படிச் செய்ய முடியவில்லையே'' என்கிறாள். அவனும் ஜெகநாதத்திற்கு வா என்கிறான். இதுதானே இன்றைக்கும் ஜெகநாதத்தில் இருக்கிறது?

துரோபதை முதலியவர்கள் எல்லாம் அவன் தங்கைகள் என்று இன்னொருவன் சொல்லுகிறான்! துரோபதை யோக்கியதை எப்படி? சினிமாவிலே வேண்டுமானால் இப்படியெல்லாம் செய்யேன்! ஆண் பிள்ளை சாமி பெண் பிள்ளை சாமி எல்லாவற்றிற்கும் கையிலே சூலாயுதம் வேலாயுதம் சக்தி - இவை எதற்கு? இப்படிச் சாமிகளே யோக்கியதையாக நடக்கவில்லையென்றால் மனிதன் எப்படி யோக்கியதையாயிருப்பான்? காசு பிடுங்கினாலும் பரவாயில்லை, நம்மை மடையனாக்கி விட்டானே. 1957-லே எப்படி நடந்து கொள்வது என்று வேண்டாமா?

நமக்குச் சரித்திரம் இல்லை; பார்ப்பான் வருவதற்கு முன் நம்ம சங்கதியைக் காட்டுவதற்குச் சரித்திரம் இல்லையே! பார்ப்பான் வருவதற்கு முன்னாலே கடவுள் இருந்ததாகக் கதைகூட இல்லையே! பார்ப்பான் வந்த பிறகுதானே கடவுள் வந்தது? யாராவது மறுத்துச் சொல்லட்டுமே பார்க்கலாம். பாரதம் பாகவதம் போன்ற இவற்றிலே வருவதுதானே இன்றைக்குக் கடவுள்? என்ன யோக்கியதை? பெண்டாட்டி, வைப்பாட்டி, ஆணும் கூடி பிள்ளை பெறுவது போன்றவை! என்ன அநியாயம்? இவற்றையெல்லாம் இன்னொரு நாட்டானிடம் போய்ச் சொன்னால் நம்மை மதிப்பானா? ஒழுக்கமுள்ள சாமி என்று ஒரு சாமியை யாராவது சொல்லட்டுமே!

இராமாயணத்திலே வருகிற இராமன், அவன் மனைவி, வேலைக்கார அனுமான் எல்லாம் கடவுள்! இராமன் கடவுள் என்கிறதற்கு ஆதாரம் வேண்டாமா? எதிலே யோக்கியதையாக நாணயமாக நடந்தான் என்று யாருக்கும் தெரியாது. 1957-லேயா இராமாயணத்தைக் கடவுள் சம்பந்தமானது என்று நினைப்பது? பாரதத்திலோ எல்லாம் அயோக்கியர்களே! இன்றைக்கு எல்லோரையும் தெய்வீகத் தன்மையுள்ளவர்களாகச் செய்து வைத்திருக்கிறான்! பாரதத்தை ஒரு விபச்சாரிக் கதை என்றே சொல்லலாம். ஒருவனாவது அதிலே அவன் அப்பனுக்குப் பிறக்கவில்லையே! கண்டவர்களுக்குப் பிறந்தவர்கள் பங்கு கேட்டார்கள்; கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதாகக் கதை!

கதை நடந்தது என்று சொல்லவில்லை; குப்பைக் கதையை எழுதிவிட்டு அய்ந்தாவது வேதம், அப்படி இப்படி என்று சொல்லி நம்மை மட்டம் தட்டி வைத்திருக்கிறான் பார்ப்பான். இராமன் ஏன் காட்டுக்குப் போனான்? கதைப்படி இராமனுக்கும் அவனப்பனுக்கும் சொத்தில் உரிமையில்லை. பரதனின் அம்மாவைக் கல்யாணம் பண்ணும்போதே இராச்சியத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டான். தசரதன் மரியாதையாக அவளுக்கே நாட்டைக் கொடுத்திருக்க வேண்டும். துரோகத்திற்குச் சம்மதித்தாலே ``காட்டுக்குப் போ'' என்று சொன்னாள் அப்பன் சொன்னதுக்காகப் போனான் என்று திரித்துச் சொல்லுகிறான் பார்ப்பான் இன்றைக்கு! இராமனும் அவனப்பனும் காட்டுக்குப் போகாமலிருப்பதற்கு என்னென்ன தந்திரம் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தார்கள்! இராமனே சொல்கிறான், பரதனிடம்: ``உன் அம்மாவுக்கே இராச்சியம் சொந்தம்'' என்று. சோமசுந்தர பாரதியார் ``தசரதன் குறையும் கைகேயி நிறையும்'' என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அதைப் படித்தால் தெரியும். இராமாயண ஊழல்பற்றிப் பேச ஒருநாள் போதாதே! நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இப்படியெல்லாம் வெட்கம் இல்லாமலே எழுதியிருக்கிறானே என்றுதான் சொல்கிறேன். வால்மீகி எழுதியபடி சீதையே இராவணன் பின்னாலே போயிருக்கிறாள்! அவன் வந்தது தெரிந்தே இலட்சுமணனைப் போகச் சொல்லி வேலையிடுகிறாள். இராமாயணத்தில் வர்ணித்து எழுதியிருக்கிறான். ``படுக்கையெல்லாம் சிதறிக் கிடந்தது. சின்னா பின்னப் பட்டிருந்தது'' என்று வால்மீகிப்படி இராவணன் சீதையை அவள் இஷ்டமில்லாமல் தொட்டிருக்க முடியாதே? இரண்டு சாபங்கள் இருக்கின்றன. வால்மீகி சாடை காட்டுகிறான். சாபம் ஞாபகத்துக்கு வந்து அவள் கூந்தலையும், தொடையையும் பிடித்துத் தூக்கினான் என்று! வால்மீகி ஒன்றையும் மறைக்காமலே எழுதியிருக்கிறான். நாங்கள் சொல்வதிலே பொய்யிருந்தால் பார்ப்பான் விட்டுவிடுவானா? உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி மாதிரி விழித்துக் கொண்டே நம்மை ஒழித்துக்கட்டப் பார்க்கிறானே? இராமன் ஒடித்த வில் முன்னாலேயே ஒடிக்கப்பட்ட வில் என்கிறதற்கு அபிதான சிந்தாமணியில் அய்ந்து இடங்களிலே ஆதாரங்கள் இருக்கின்றன.

--------------- தந்தைபெரியார் - "விடுதலை" 14.7.1957

பார்ப்பனர்களுக்கு நல்ல புத்தி வரவே வராது!

தி.நகராம்!

என்னதான் இடித்து உரைத்தாலும் பார்ப்பனர்களுக்கு நல்ல புத்தி வரவே வராது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

சென்னை - தியாகராயர் நகர் தியாகராயர் மண்டபத்தில் நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்க்கப்பட்டது.

அந்தச் சிறப்புமிக்க விழாவில் பங்கேற்ற மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நீதிக்கட்சியின் தந்தை என்று போற்றப்படும் ஒரு தலைவரால் வழங்கப்படும் இந்தத் தியாக ராயர் நகரை அவர் பெயரால் அழைக்காமல் தி.நகர் என்று போடுகிறார்களே என்று தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி னார். திருவல்லிக்கேணியை தி.கேணி என்று எழுதாத ஒரு கூட்டம், தியாகராயர் நகரை மட்டும் தி.நகர் என்று போடுவானேன் என்று நாக்கைப் பிடுங்க வும் வினா எழுப்பினார்.

என்னதான் நீங்கள் இடித் துக் கூறினாலும், தமிழர்கள் என்றால் நாங்கள் நஞ்சுதான் - எங்களுக்கு உரைக்கவே உரைக் காது என்பதைக் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் காட்டிக்கொள் ளும் வண்ணம் - திருவாளர் வைத்தியநாதய்யர் தலைமையில் இயங்கும் - அசல் ஆர்.எஸ்.எஸ். ஏடாக உருவெடுத்துக் கொக்கரிக்கும் தினமணி இன்றுகூட மூன்றாம் பக்கத்தில் தி.நகர் நடைபாதை கடைகள் குறித்து இன்று ஆய்வு என்று செய்தி போடுகிறது.
பார்ப்பனர்களும் தமிழர்கள் தான் என்று இன்றைக்குக்கூடப் பம்மாத்துப் பேசும் தமிழன்பர்கள், பார்ப்பனர்களின் பச்சையான தமிழ் - தமிழர் விரோதப் போக்கை இதன் மூலமாகவாவது புரிந்துகொள்ளட்டும்!

தந்தை பெரியார் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில், தந்தை பெரியார் அவர்களின் நாள் குறிப்பிலிருந்து ஒரு தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

ராஜேந்திர பவன், உடுப்பி பவன், டூரிஸ்ட் லாட்ஜ், வசந்தா விஹார், ராமச்சந்திர விலாஸ், ஷண்முகானந்த பவன், ராம விலாஸ், உட்லண்ட்ஸ், அம்பாள் பவன், சென்ட்ரல் லாட்ஜ், லக்ஷ்மி கப்பே, எவரெஸ்ட், போர்டிங் லாட்ஜிங், ஸ்ரீ கிருஷ்ணா பவன், கோதண்ட விலாஸ், சென்ட்ரல் கப்பே, ஸ்ரீ நிவாஸ் கப்பே, மாடர்ன் கப்பே, லஞ்சு ஹோம்
இதில் எது தமிழ்?
என்று தந்தை பெரியார் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.


நூற்றாண்டு விழா நாயகரான அறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் என்றால் பார்ப்பனர்களின் நடப்பு என்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழ ரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர் கள் தமிழிடத்திலே அன்பு கொள் வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத் தின்மீதுதான் (திராவிட நாடு, 2.11.1947) என்கிறார் அறிஞர் அண்ணா.

இதற்குமேலும் பார்ப்பனர் களைபற்றி புரிந்துகொள்ள என்ன இருக்கிறது?

----------- மயிலாடன் அவர்கள் 24-9-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

26.9.08

கருத்துக்குப் பதில் கல்லடியா?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11 ஆவது மாநில மாநாட்டுத் தொடக்க விழாவும், தந்தை பெரியார் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் 22.9.2008 மாலை சென்னையை அடுத்த போரூரில் நடைபெற்றது.

காவல் துறையினரின் அனுமதியைப் பெற்றுத்தான் நடந்தது. இந்த நிலையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குண்டர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கற்களை வீசியும், நாற்காலிகளை உடைத்தும் பெண்கள் என்றும் பாராமல் தாக்கியும் கோரத்தாண்டவம் ஆடியிருக் கின்றனர்.

இதற்கு முன்பும்கூட இரண்டு ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கலை நிகழ்ச்சியிலும் இவ்வாறே இந்து முன்னணியினர் நடந்துகொண்டுள்ளனர்.

இதே போரூரில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்திலும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுண்டு. ஒருமுறை புத்தகச் சந்தையை அங்கு திராவிடர் கழகம் நடத்தியபோதும், இதே கூட்டம் காலித்தனத்தில் ஈடுபட்டது.

தமிழ்நாட்டில் மாற்றுக் கட்சியினர் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களை வன்முறைமூலம் தடுத்து நிறுத்தலாம் என்கிற அணுகுமுறையை இந்தக் கும்பல் கடைபிடிப்பதாகத் தெரிகிறது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற இரு பொதுக்கூட்டங்களின்போதும்கூட கூட்டத்தை நடத்தவிடாமல் கலாட்டா செய்துள்ளனர். அந்த நேரத்தில் எல்லாம் காவல்துறையினர் காலித்தனத்தில் ஈடுபடும் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தாமல், கூட்டம் நடத்துபவர்களிடம், கூட்டத்தை விரைவாக முடியுங்கள் என்கிற போக்கில் பேசியிருக்கின்றனர்.

இது ஒரு விரும்பத்தகாத போக்காகும். காவல்துறை அனுமதி பெற்று பிரச்சாரக் கூட்டங்களை நடத்தும்போது அதனைத் தடுத்திட யாருக்கும் உரிமை கிடையாது. வேண்டு மானால், அதற்கு மாற்றாக வேறு ஒரு நாளில் கூட்டம் போட்டு பதில் கூறலாம். அதனை விட்டுவிட்டு கூட்டத்தையே நடத்தக் கூடாது என்று அராஜகம் செய்தால், அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இதே முறையை இந்து முன்னணி வகையறாக்கள் கூட்டம் போட்டால், மற்றவர்கள் பின்பற்ற முடியாதா? அது என்ன முடியாத காரியமா?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பொதுக்கூட்டம் போட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் என்கிற ஒருமுறை - திராவிடர் இயக்கத்தால் தொடங்கப்பட்டு, இப்பொழுது மற்ற மற்ற கட்சிகளும் அந்த முறையைக் கடைபிடித்து வருகின்றன. கருத்தினை கருத்தால் வெல்ல முடியாத பாசிசக் கும்பல், கருத்துக்குப் பதில் கல்லடி என்ற கேவலமான ஒரு கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டிய அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சபாஷ் போட்டு தூண்டி விடுகிறார்கள். பொறுத்தது போதும் என்று இந்துக்கள் பொங்கி எழுந்துவிட்டனர் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருக்கக் கூடிய திரு. இல. கணேசன் அறிக்கை வெளியிடு கிறார்.

வட மாநிலங்களில் காலித்தனம் செய்து, வன்முறையில் ஈடுபட்டு மத வாரியாக மக்களைக் கூறுபடுத்தி தங்கள் அமைப்பு களை வளர்த்தெடுப்பது போல, தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்ற யுக்தியில் சங் பரிவார்க் கும்பல் செயல்படுவதாகத் தெரிகிறது.

இதனைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது - சங் பரிவார் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது
.

கட்சிகளுக்குக் கொள்கைகளைச் சொல்லிக் கொடுப்பது காவல்துறையினரின் வேலையல்ல. அவர்கள் பேச்சில் வன் முறை இருக்குமானால், அதன் அடிப்படையில் வழக்கினைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழக பா.ஜ.க.வின் துணைத் தலைவராக எச். ராஜா என்கிற ஆசாமியிருக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூரில் நின்று கட்டிய தொகையைத் திரும்பப் பெறாத இந்த சூராதி சூரர் மேடைகளில் பேசும் முறை மிகமிக ஆபாசமானது - அருவருக்கத்தக்கது.

தமிழகத்தின் மதிக்கத்தக்க தலைவர்களை - சாக்கடை மொழியில் அர்ச்சிக்கிறார்; வன்முறையைத் தூண்டும் வகையில் பச்சையாகப் பேசுகிறார். அவர் பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக்கூட்டப் பேச்சும் கிரிமினல் வழக்குத் தொடரத்தக்கவையாகும். புழுத்த நாய் குறுக்கே போகாது என்பார்களே அந்த அளவுக்குத் தரமற்றது. இத்தகு உரைகளை அனுமதிக்கும் காவல்துறை கொள்கை ரீதியாகப் பொதுக்கூட்டம் நடத்துவோருக்கு நெருக்கடிகளை அழுத்தங்களைக் கொடுப்பது சரியல்ல.

வன்முறையைத் தூண்டுமாறு பேசும் சங் பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை தேவை! தேவை!! என்று வலியுறுத்துகிறோம்.

--------------நன்றி: "விடுதலை"தலையங்கம் 26-9-2008

இன்றைய இழிந்த நிலைக்கு காரணம்



காரணமாய்...

"எதற்கும் பகுத்தறிவை உபயோ கிக்கவிடாமலும், ஆராய்ச்சி செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது."

--------------------தந்தைபெரியார் "குடிஅரசு", 4.5.193

இந்து = பார்ப்பனர்




பார்ப்பன ஆட்சியே!

"இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும்."

---------------- தந்தைபெரியார் - "விடுதலை", 22.9.1972