Search This Blog

10.12.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! - 22


பார்ப்பனர்களைப் புரிந்துகொண்டார் காந்தியார்

காந்தியடிகளை ஏசிக்கொண்டிருந் தார் ஈ.வெ.ரா. என்ற குற்றச்சாற்று ஒன்று. ஏசினாரா?குற்றம் சுமத்தினாரா? என்பதே கூட புரியாத நிலை - தடுமாற்றம்! காங்கிசை விட்டு விலகி வெளிவந்த பெரியார் காந்தியாரின் விருப்பத்தின் பேரில் 1927 இல் பெங்களூரில் சந்தித்து இரண்டு மணி நேரத்துக்கு மேல் காந்தியாரிடம் விவாதித்தவர் தந்தை பெரியார்.

இந்து மதம், காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைக் காரணகாரியத்துடன் விளக்கியும் இருக்கிறார்.

நீங்கள் சொல்லுவதுபோல சுதந்திரத்துக்குப் பின் இந்து மதத்தைச் சீர்திருத்துவதாகக் கூறி, அதில் கை வைத்தால் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று காந்தியாரிடம் நேருக்கு நேர் கூறினாரே - அதுதானே பின்னர் நடக்கவும் செய்தது?

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட் டது பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து (விடுதலை 13.-1-.1965) என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.-8-.1947 இல்; காந்தியார் கொல்லப்பட்டது 30.-1-.1948 இல்; அதாவது சுதந்திரம் பெற்ற 165-ஆம் நாளில் கொல்லப் பட்டார். காந்தி நம் நாடு மதச்சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரி யாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படா விட்டால் இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்றாரே பெரியார். ஒரு எழுத்தை மறுக்க முடியுமா?

காந்தியார் தமிழ்நாட்டுக்கு வந்தபோதெல்லாம் சுயமரியாதைக் காரர்கள் சந்தித்து பல்வேறு கேள்வி களைக் கேட்பதுண்டு. அதன் மூலம் காந்தியார் பார்ப்பனர்களின் உண்மை நிலையைத் தெரிந்தும் கொண்டார்.

தஞ்சாவூர் பொதுக் கூட்டத்தில் (16-.9.-1927) காந்தியார் பேசியதிலிருந்து அதன் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது, பிரமண ரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட் டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட் டால் அவன் பிராமணன் அல்லன் என்றாரே!

பெரியார் சொன்னால், ஒரு கைவல்யம் எழுதினால் பார்ப்பனர்களுக்குக் குமட்டல் வரும். காந்தியாரே கூறி இருக்கிறாரே? என்ன பதில்?

தமிழ்நாட்டின் கோவில்களைப் பார்த்த காந்தியார் என்ன சொன்னார்?

கானாடுகாத்தானுக்கு காந்தியார் சென்றார் (22.-9.-1927). அங்கிருந்த கோயில்களைப் பார்த்த காந்தியாருக்கு மனவருத்தம் ஏற்பட்டது.
ஆலயங்களை நிர்மாணிப்பதில் நீங்கள் தாராளமாகப் பணத்தைச் செலவிடுகிறீர்கள் என்று அறிகிறேன். ஆலயம் என்று ஒரு கட்டடத்தைக் கட்டி விட்டதால் மட்டும் கடவுள் அங்கு இருக்கிறார் என்று எண்ணுவது மூடநம்பிக்கை. தாசிவீட்டில் எந்த அளவு இறைவன் இருப்பாரோ அந்த அளவு அவர் இருக்கும் ஆலயங்கள் பலவற்றை நான் அறிவேன் என்று சொன்னாரே! (தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 533).

பச்சையாகச் சொன்னால் கோவில்களை விபச்சார விடுதி என்று கூறி விட்டார். பெரியார் சொன்னால் மேலே விழுந்து பிடுங்கும் ஆசாமிகள், இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

காந்தியார் ஒரு முறை காசி விசுவநாதன் கோவிலுக்குச் சென்றார். அங்கு என்ன நடந்தது? இதோ காந்தியாரே கூறுகிறார்:

நான் கண்டவை எனக்கு மன வேதனையைத் தந்தன. நான் அடைந்த ஏமாற்றம், நான் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு அதிகமாயிருந்தது.

காந்தியார் ஆழமான பக்தி கொண்ட இந்துவாக இருப்பினும், பல பெரியவர்கள் மதம், கடவுள் காரணமாக பல்வேறு புரட்டுகளை அவ்வப்போது குறிப்பிட்டிருப்பவைகளையும் புண்ணிய ஸ்தலங்கள் எனப்படுபவைகளில் நடைபெறும் அக்கிரமங்கள், ஆபாசங்களை அம்பலப்படுத்தியிருப்பதையும் அறிந்திருந்ததாலோ என்னவோ, காசிக்குப் புறப்படும் முன்பாகவே அங்கு சில பலவற்றை எதிர்பார்த்துச் சென்றுள்ளார்.

ஆகவேதான் நான் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு ஏமாற்றமடைந்தேன் என்று கூறுகிறார்.

சரி. அவர் கூறுவதை மேலும் கவனிப்போம். குறுகலான வழுக்கும் ஒரு சந்தின் வழியாகவே கோவிலுக்குப் போகவேண்டியிருந்தது. அங்கு அமைதி என்பதே இல்லை. ஈக்கள் ஏகமாக மொய்த்தன. கடைக்காரர்களும், யாத்ரீகர்களும் போட்ட சப்தம் சகிக்க முடியாததாக இருந்தது. நான் கோவிலுக்குள் போனதும் வாசலில் அழுகி நாற்றமெடுத்த பூக்குவியலே எனக்கு வரவேற்பளித்தது ஞானவாவி (ஞானக்கிணறு) பக்கத்தில் போனேன். அங்கே கட வுளைக் காணவேண்டும் என்று தேடி னேன். ஆனால் நான் காணவில்லை. ஆகையால் எனக்கு மனநிலை நன்றாக இல்லை. ஞானவாவியைச் சுற்றிலுங் கூடமாகவே இருந்தது. தட்சணை கொடுக்க எனக்கு விருப்ப மில்லை. ஆகையால் ஒரு தம்படி கொடுத்தேன். அங்கே இருந்த பண்டாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அந்தத் தம்படியை வீசி எறிந்து விட்டார். இந்த அவமரியாதை உன்னை நேரே நரகத்திற்குத் தான் கொண்டு போகும் என்று கூறி என்னை சபித்தார்.

கேளுங்கள் தோழர்களே! கேளுங்கள். மகாத்மா காந்தி அவர்களை _ மரியாதைக்குரிய மாபெரும் தலைவனை, தட்சிணையாக ஒரு தம்படியை மட்டுமே கொடுத்தார் என்பதற்காக, பக்தர்கள் போடும் பிச்சைக் காசுகளை பொறுக்குவதற்காகவே கோவில் பிரகாரங்களில் காத்துக் கிடக்கும் ஒரு பரதேசி பண்டா சாபம் கொடுக்கிறான் சாபம்.

இந்த நிகழ்ச்சியைப் படித்த மாத்திரத்திலேயே, அறிவு ஆசான், தந்தை பெரியார் அவர்கள் நம் மனக் கண் முன் தெரிகிறாரா - இல்லையா? ஆச்சரியம் அதுவல்ல நண்பர்களே! காந்தியாருக்கே அந்தச் சமயத்தில் பெரியார்தான் தோன்றியிருக்கிறார் - அதிசயத்தைப் பாருங்கள் - காந்தி வாயிலாகவே கேட்டு இன்புறுங்கள்.

பண்டாவிடம் காந்தியார் கூறுகிறார்.

மகாராஜ்! என் விதி எப்படியாயினும் சரி, ஆனால் இப்படியெல்லாம் பேசுவது உங்களைப் போன்றதோர் வகுப்பினருக்குத் தகாது. விருப்பமிருந்தால் அந்தத் தம்படியை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லா விட்டால் அதையும் நீங்கள் இழந்து விடுவீர்கள் என்றேன்.

காந்தியாரின் நகைச்சுவையையும் ரசிக்கலாம்.

பண்டாவுக்குக் கொடுத்தது ஒரு தம்படி. அவரைக் கூப்பிடுவதோ மகாராஜ்!

பண்டா கூறுகிறான்:

போய்த் தொலை. உன் தம்படி எனக்கு வேண்டாம் என்று கூறி தொடர்ந்து வசைமாரி பொழிந்தார். தரையில் கிடந்த தம்படியை எடுத்துக் கொண்டு நான் நடக்க ஆரம்பித்தேன். பிராமணர் ஒரு தம்படியை இழந்தார். எனக்கு ஒரு தம்படி மிச்சம் என்று என்னைப் பாராட்டிக் கொண்டேன்.

ஆனால் மகராஜ் அந்தத் தம்படியை விட்டுவிடக் கூடியவர் அல்லர். என்னைத் திரும்பக் கூப்பிட்டார். அது சரி,. அந்தத் தம்படியை இங்கே கொடுத்து விட்டுப்போ! உன் தம்படியை வாங்கிக் கொள்ள நான் மறுத்துவிட்டால், அது உனக்கு கெடுதல் ஆகிவிடும் என்றார். நான் ஒன்றும் சொல்லாமல் அந்தத் தம்படியைக் கொடுத்துவிட்டேன். அப்புறம் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டேன். - இவ்வாறாக காந்தியார் தனது சுயசரிதையில் எழுதுகிறார்.

ஒரு தம்படி கொடுத்துவிட்டானே பாவி என ஆக்ரோஷம் கொண்டு நீ நேரே நரகத்துக்குத்தான் போவாய் என ஆபாசமாக சாபம் கொடுத்த அதே பண்டா அந்தக் காசையும் திரும்ப எடுத்துக் கொண்டு காந்தியார் போக எத்தனிக்கவும், நான் உன்னிடம் பெற்றுக் கொள்ளாவிட்டால் உனக்குக் கெடுதல் சம்பவிக்கும் என நைசாகப் பேசி தம்படியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறான்.

பரந்து விரிந்து கிடக்கும் ஒரு மாபெரிய தேசத்தின் மரியாதைக்குரிய தலைவரையே ஒரு சர்வ சாதாரண மான கோவில் பண்டா எவ்வளவு அலட்சியமாகவும், ஆணவத்தோடும் நடத்துகிறான் என்பதையும், சில்லறைக் காசுகளைப் பொறுக்கித் தின்ன எவ்வளவு பேராசையுடன் உள்ளனர் என்பதையும் நமது நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டியே இதை எழுதினேன். இம்மாதிரியான பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சம்பவங் களைக் கண்டறிந்துதான் கோவில்கள் எல்லாம் விபச்சார விடுதிகள் எனக் காந்தியார் கூறினார் போலும்.

காந்தியார் தான் அணிந்திருந்த பூணூலையும் அறுத்தெறிந்தாரே! லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமல் இருக்கும்போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆதலால் நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு, மாசற்ற வாழ்வு வாழ வேண்டும். ஆத்மார்த்தீகமான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்க வேண்டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இந்து இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலையும் அணிந்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்கு சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண்டாமை, உயர்வு, தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம், யாவும் ஒழிந்தபிறகுதான் இந்துவுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க் கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன் றவில்லை. (சுயசரிதம் - பக்கம் 480)

தமிழ்நாட்டிற்கு காந்தியார் வந்த போது நடந்த முக்கியமான நிகழ்வு ஒன்று (16-9-1927)

மன்னார்குடியிலிருந்து நாகப்பட் டினம் பாசஞ்சர் இரயிலில் மறுநாள் காலை தஞ்சாவூருக்கு அண்ணலும் அவரது குழுவினரும் வந்து சேர்ந்தார்கள். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும், கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அதற்கு முந்திய இரயில் நிலையத்தில் காந்திஜி இறங்கி விடுகிறார் என்பதை அறிந்த தஞ்சை மக்கள் இன்று ஒரு தந்திரம் செய்தார்கள். மன்னார்குடியிலிருந்து தஞ்சைக்குள் டாக் ரோடு வழியாக நுழையக் கூடிய இடத்தில் கூடி நின்றார்கள். ஆனால் இம்முறை காந்திஜி அவ்வாறு இறங்கவில்லை. திட்டப்படி தஞ்சாவூர் இரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். மறுபடியும் பொது மக்களுக்கு ஏமாற்றம் தான். தஞ்சையில் காந்திஜி குழுவினர் உக்கடை ஹவுஸ்ஸில் தங்கி யிருந்தார்கள். இந்த நகரில் நடைபெற்ற ஒரு முக்கியமான காரியம் நீதிக் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களும் காந்திஜியும் சந்தித்துப் பேசியதேயாகும். பன்னீர் செல்வம், உமாமகேசுவரம்பிள்ளை (நீதிக்கட்சித் தலைவர்கள்) உக்கடைத் தேவர், சையத் தாஜுதின், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருக்கு அண்ணல் பேட்டி அளித்தார். (மற்றும் பாப்பநாடு ஜமீன்தார், கே. நடராஜன் முதலிய பல பிரமுகர்களையும், காந்திஜி சந்தித்துப் பேசினார். கே.நடராஜன் தாயாரான வயதான அம்மையார் காந்திஜியைப் பார்க்க வந்தபோது அண்ணல் அவரை அன்போடு வர வேற்று, பெண்கள் கட்டிக் கொள்ளத் தக்க மெல்லிய புடவைகள் கதரில் இருப்பதாகச் சொன்னார். நீதிக்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசியது இரு தரப்பினருக்குமே நல்லதாகப் போயிற்று. காந்தியின் தரப்பை அவர்களும், அவர்கள் தரப்பை காந்திஜியும் அதிகம் புரிந்து கொள்ள இந்தச் சந்திப்பு உதவியது. நீதிக்கட்சித் தலைவர்களான பன்னீர்செல்வமும், உமாமகேசுவரம் பிள்ளையும் காந்திஜியைச் சந்தித்துப் பேசிய உரையாடல் சுதேசமித்திரன் இதழில் அந்தக் காலத்தில் விவரமாக வெளியாகியிருந்தது. சுருக்கத்தைப் படித்துப் பார்ப்பது கூட இப்போது சுவையாக இருக்கும். உமா மகேசுவரம்பிள்ளை: பிராமணர்-பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும். மகாத்மா: பிராமணரல்லாதாரே இந்த இயக்கத்தைப் பற்றிப் பலவிதமாகக் கூறுகிறார்கள். பிராமணர்,- பிராமணரல்லாதாருக்கிடையே இப்போது வேறுபாடுகள் இருந்தாலும் சிறிது காலத்தில் அவை மறைந்துவிடும் என்று டாக்டர் வரதராஜுலு நாயுடு கூறுகிறார். என்னைப் போன்றவர்கள் இதில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால் ஈரோடு ராமசாமி நாயக்கர் தென்னாட்டில் பிராமணர் கொடுமை அதிகமாக இருக்கிறதென்றும் என்னைப் போன் றவர்களே இதில் அவசியம் தலையிட்டு, மன நிறைவு தரக்கூடிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் கூறுகிறார். இப்போது பிராமணர் களிடத்து முற்போக்கான கொள்கைகள் பரவி வருவதைக் காண்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தபோது, எஸ்.சீனிவாச அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட் கார்ந்து இருந்தேன். இப்போது, அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர் களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள். - (தமிழ்நாட்டில் காந்தி -பக்கம் 520-521)

இந்த நிகழ்வு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் விளக்கிக் கூறியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொல்வது 1925 ஆம் ஆண்டுக்கு முன்பாகும். அப்பொழு தெல்லாம் சீனிவாசய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் காந்தியார் உட்கார வைக்கப்பட்டார். இப்பொழுது (1927) மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனிவாச அய்யங்கார் வீட்டு அடுப்பங்கரை வரை காந்தியாரின் மனைவியால் போக முடிகிறது என்றால் என்ன காரணம்? சுயமரியாதை இயக்கத்தை 1925 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தோற்று வித்ததன் விளைவுதான் காந்தியாருக்கே இந்த உரிமை கிடைத்தது என்று பொருள். பெரியார் என்ன சாதித்தார்? அவர்களின் இயக்கம் என்ன சாதித்தது? என்பதற்குக் காந்தியாரின் இந்த வாக்குமூலம் ஒன்று போதாதா? தந்தை பெரியாரை மட்டம் தட்டுவதற்காக காந்தியாரைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனர்கள் காந்தியாரின் இன்னொரு பக்கத்தைக் காண மறுப்பது ஏன்? காணாது கண்களை மூடிக் கொள்வது - ஏன்? காந்தியாரின் மறுபக்கத்தை தந்தை பெரியார் உணர்ந்ததாலும் - அவர் கொல்லப்பட்டதற்குக் காரணம் பார்ப்பன மதவாத சக்திகள் என்ப தாலும், பல வகைகளில் காந்தியார் கொள்கைகளிலிருந்து பெரியார் மாறு பட்டு இருந்தாலும், இந்த நாட்டுக்குக் காந்தி நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கூறினார். இதைப் பற்றியெல்லாம் புரிந்து கொள்ளாமலும், புரிந்து கொண்டாலும், அதனை இருட்டடிக்கவேண்டும் என்ற சூழ்ச்சியாலும் காந்தியாரைப் பெரியார் ஏசினார் என்று கண்மூடித்தனமாக எழுதுகிறது துக்ளக் கூட்டம்.

காந்தியாரை பெரியார் ஏசினார் என்ற குற்றப் பத்திரிகை படித்துவிட்டு காமராஜரை ஆதரிப்பதாக அறிவித்துக் கொண்டு ஈ.வெ.ரா. செயல்பட ஆரம் பித்ததும், பகையாளிக் குடியை உற வாடிக் கெடுக்க ஈ.வெ.ரா. நுழைந்திருக்கிறார். சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முன்பே எச்சரித்திருந்தார்கள்.

மறுபடியும் மறுபடியும் குறிப்பிட்டுச் சொல்லாமல் மூத்தத் தலைவர்கள் சொன்னதாகச் சொல்லுவது எல்லாம் அசல் வெட்கங்கெட்டதனமே.

சி.சுப்பிரமணியம் போன்றவர்கள், ஆர்.வெங்கட்ராமன் போன்றவர்கள், தந்தை பெரியாரை ஆதரிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

மந்திரி சபையில் பார்ப்பனர் இல்லாத குறையை சி.சுப்பிரமணியம் நிவர்த்தி செய்கிறார் என்று அவரை அடையாளம் காட்டினார் பெரியார். அப்படிப்பட்டவர்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறது ஆரியம்!
அதைப் பற்றியும் எழுதுவோம்!
*************************************************

மேதாவிகளின் கேள்வியும் - அய்யாமுத்துவின் பதிலும்


பார்ப்பனனைக் குறை சொல்வானேன்? கொடைக்கானல் பார்ப்பனன் பஞ்சு மெத்தை போட்டு, காலாள், கையாள்களோடு மோட்டார் வாகனத்தில் குடும்ப சகிதமாய் சுகபோகமனுபவிப்பதைக் கண்டு பொறாமை கொள்வதும், வக்கீல் பார்ப்பனன் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொள்ளையடிப்பதைக் கண்டு துவேஷப்படுவதும், சிம்லாப் பார்ப்பனன் துரைபோல சட்டை மாட்டி, மேஜை மீது உட்கார்ந்து விஸ்கி, பிராந்தி, ஒயினோடு சாப்பிடுவதையும் கண்டு ஆத்திரப்படுவதும் கூடாது, பார்ப்பனரல்லாத நீங்களும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வாருங்கள். பார்ப்பனனை நிந்திக்கும் நேரத்தையும், திறத்தையும் நீங்கள் முன்னேற்றமடைவதில் செலவிடுங்கள் என்று யாரேனுமொரு மேதாவி கூறலாம். கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், சாதி ஆகிய சகலமும் பார்ப்பனர்களாலே பார்ப்பனர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டன. இதில் பார்ப்பனர்கள் முன்னேறுவதற்கு சகல உரிமைகளுமுண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைவதற்கு இப் பார்ப்பனக் கடவுள்களும், மதமும், சாஸ்திரங்களும், சாதிகளும் இடங் கொடுக்காமல் பல நூற்றாண்டுகளாக மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றன. மனிதன் பிறப்பினால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற கொள்கையும், ஒரு மனிதனைப் பிற மனிதன் கண்ணால் பார்க்கக்கூடாது என்ற கொள்கையும் இருக்கும் வரையில் மக்கள் எப்படி முன்னேற முடியும்? இவ்விருபதாம் நூற்றாண்டிலும் நாகரிகம் வாய்ந்த ஆங்கில துரைத்தனத்தின் ஆதினத்தின் கீழுள்ள பக்தி சிரத்தையுள்ள மைசூர் மன்னரின் நாட்டிலுள்ள பண்டிதப் பார்ப்பனன் சமஸ்கிருத வியாகரணத்தைப் பார்ப்பனர் அல்லாத ஏனைய மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க; மறுத்தனன் என்றால் என்னே பார்ப்பனக் கொடுமை! மக்களின் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கையைக் காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானித்தவுடன் ஒப்போம்! ஒப்போம்!! என வெளியேறிய ராஜகோபாலாச்சாரிகளை வைத்துள்ள பிராமணியத்தின் கொடுமையை அளவிட்டுக் கூறமுடியுமா? (அய்யாமுத்து கட்டுரைகள் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 5,6,-7)

அய்யாமுத்துவை பெரியாருக்கு எதிராகக் கொண்டு வந்து நிறுத்தும் பார்ப்பனர்களே, அய்யாமுத்துவின் இந்தக் கட்டுரை கசக்கிறதா - இனிக்கிறதா?

---------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 10-12-2011 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

0 comments: