Search This Blog

14.7.15

பிள்ளையார் உடைப்பு - நீதிபதி தீர்ப்பு!

பிள்ளையார் உடைப்பு - நீதிபதி தீர்ப்பு!


மக்கள், வள்ளுவர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 4-நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி, "இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3-மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.

உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்ததால் கடவுளை உடைத்ததாக ஆகாது. புத்தர் சொல்லி இருக்கிறார், உருவ வழிபாடு வேண்டாம் என்று.

நாங்கள் கடவுள் விலக வேண்டும் என்று சொல்லவில்லை. வேண்டும் என்பவர்கள் 98-சதவிதம் இருக்கலாம். சண்டையில்லை நமக்கு அத்தனைப் பேரோடும் கடவுள் இருப்பதாக நம்பினாலும் இத்தனை கடவுள் உருவங்கள் ஏன்? அவைகளுக்கு பூசைகள் எதற்கு? கோவில்கள் எதற்கு? அவைகளுக்கு வைப்பாட்டிகள் எதற்கு? குடும்பங்கள் எதற்கு? என்றுதான் கேட்கிறோம். 

ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வையுங்கள். நாங்கள் உருவ வழிபாடு வேண்டாம் என்று புத்தர் சொன்னதற்காகச் சொல்பவர்களல்ல. நாங்கள் சொல்கிற கருத்துக்களுக்கு இயல்பாகவே 2500-ஆண்டுகளுக்கு முன்பே உலக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிற புத்தர் கூறினார் என்று எங்கள் கருத்துக்கு ஆதாரம் காட்டுகிறோம். வக்கீல் தனது, Law report–ல் முன்னாளில் நடந்த தீர்ப்பை எடுத்துக்காட்டுவது போல காட்டுகிறோம்.


புத்தரும் உருவ வழிபாடு வேண்டாம் என்று கூறினார். புத்தர் சாமான்யரல்ல. உலக மக்களால் நன்கு மதிக்கப்படுகிறவர். புத்தர் உயர்ந்தவர், ஞானி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ளனர். நம் இந்திய அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ளது. புத்தரது சக்கரம் தான் அரசாங்கக் கொடிகளில் உள்ள சக்கரம் - புத்தர் ஸ்தூபிதான் அரசாங்கத்தின் சின்னமாக இருக்கின்றது. புத்தர் நாளை கொண்டாடுவதற்கு என்று, 'புத்தர் ஜெயந்தி' என்று அரசாங்கத்தார் லீவு விடுகிறார்கள். 4- நாட்களுக்கு முன்புகூட நேரு அவர்கள் புத்தர் ஒரு சிறந்த ஞானி என்று பேசினார். இப்படி அரசாங்கத்தார் மதித்து – மதிப்பளிக்கிறார்கள். புத்தர் கோட்பாடுகளை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? எங்கள் மீது ஏன் குறை கூறுகிறீர்கள்?


புத்தருக்கும் மற்ற மதத்தலைவர்களுக்கும் பெரிய வேற்றுமை ஒன்று உண்டு. மகம்மதியர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் "நபிகள் தினம்", என்று கொண்டாடுகிறார்கள். நபிகள் கொள்கையைத் தட்டக் கூடாது, அவர் கூற்றுக்கள் தான் வேதவாக்கு என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். நடைமுறையில் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களின் நம்பிக்கையும் அவ்வாறே; ஏசுவின் மொழிகளை அப்படியே ஏற்று நடக்க வேண்டும் என்பது தான் மதக்கோட்பாடு. ரஷ்யாவில் கூட லெனின் இப்படிச் சொன்னார், அதுதான் சிறந்தது என்று தம் அறிவை ஒரு வகையரையில் நிறுத்துகின்றார்கள்.


நமது கம்யூனிஸ்டு தோழர்களும் கூட மார்க்ஸ் இப்படிச் சொன்னார்கள்; மக்கள் இன்பமாக வாழ அவர் காட்டும் வழிதான் சிறந்தது என்று கூறுகிறார்கள். ஆனால், புத்தர் அப்படிச் சொல்லவில்லை. "நான் சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தான் புத்தர் சொன்னார். அதையேதான் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்களும் 30-வருட காலமாகச் செய்கிறோம். சாதாரணமாக நம் இயக்கத்தில் 30-ஆண்டுகளுக்கு முன்பே சிங்காரவேலு போன்ற அறிஞர்கள் புத்தரது கோட்பாடுகளை விளக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். Professor லட்சுமி நரசு போன்றவர்கள், அப்பாதுரை, மணியர் போன்றவர்களும் அக்காலத்திலேயே நம் இயக்கத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்கள்.

புத்தர் கொள்கை பிரசார மகாநாடு என்று நாம் கூட்டினாலும், இதை பார்ப்பனர்களுக்கு விரோதமாகக் கூட்டப்பட்ட மாநாடு என்று கருதினாலும் தவறில்லை. நம் கருத்தும் அதுதானே. பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும். கழகத் தோழர்களுக்கு இது ஒரு முக்கியமான திருப்பம். 20-வருடங்களாக நாம் 'வழ வழ' வென்று ஓயாமல் பேசிக் கொண்டே இருந்து விட்டோம். அதே இடத்திலிராமல் நாம் வேகமாக முன்னேறுகிறோம். கடவுள் உருவங்களை உடைக்கிறோம். நாம் கோவிலை இடிக்க மாட்டோம் - உயிருள்ள விக்ரகங்களையும் உடைக்கவில்லை. அதாவது, பார்ப்பனன் தொட்டு பூசை செய்கிற வேலையைத் தொடங்கவில்லை. அப்படிப் பார்ப்பனர்களுடைய கோவில் விக்ரகங்களை உடைப்பதாகக் கூறினால் ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு போலீஸ்காரர்களை காவலுக்குப் போட்டு விடுவார்கள். மக்கள் மடமையிலிருந்து கற்பனைப் புளுகுகளிலிருந்து விடுபட வேண்டும்.

                                           -------------------------- 23.01.1954- அன்று ஈரோடு புத்தர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 29.01.1954- "விடுதலை"இதழில் வெளியானது

6 comments:

தமிழ் ஓவியா said...

காமராசருக்கு சூட்டப்பட வேண்டிய மாலை!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை




இன்று கல்வி வள்ளல், சமூகநீதிச் சரித்திரம் படைத்த, குலக் கல்வித் திட்டத்தை, விரட்டியடித்த மாவீரர் - அனைவருக்கும் அனைத்தும் என்ற சுயமரியாதை இயக்கத்தின் முழக்கமான தந்தை பெரியார் கொள்கையை தனது ஆட்சிக் காலத்தில் நிலை நாட்டிய நீள் புகழ் நிர்மலர் காமராசரின் 113ஆவது பிறந்த நாள் இந்நாள்!

கல்வி நீரோடையை நாடெலாம் பாயச் செய்தவர்!

திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் துவங்கிய கல்விப் புரட்சியை ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் என்ற கிரகணம் மறைத்த இருட்டினை விரட்டி அடித்து, கல்வி நீரோடை நாடெல்லாம் பாய விட்ட தமிழ்நாட்டின் அருந் தலைவர் காமராசரின் ஆட்சி மிகச் சிறப்பானது.

தகுதி, திறமை பேசி நம் மக்களை மட்டந் தட்டி வைத்தவர்களை வாயடைக்கச் செய்த நடை முறைச் செயல் வீரர்!

தந்தை பெரியார் என்ற மாபெரும் மனிதநேயத் தலைவரின் வற்புறுத்தலால் ஆட்சிக் கட்டிலில் தயங்கித் தயங்கி ஏறி, தன்னிகரற்ற ஆட்சி புரிந்து வரலாறு படைத்தவர்.
கும்பலில் கோவிந்தாவா?

காமராசரை டில்லியில் உயிருடன் (வீட்டில்) கொளுத்தி கொலை செய்ய முயன்ற கூட்டம் கூட (நவம்பர் 7 1966) இன்று காமராசருக்கு விழா எடுத்து கும்பலில் கோவிந்தா  போடுகிறது.

காமராசர் - பலருக்குப் பாடம் - சிலருக்கோ படம்!

இதைப் புரிந்து, காமராசர் விரும்பிய  ஜாதி, தீண்டாமை ஒழிந்த புதிய சமதர்ம, சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.

எது அற்புத மாலை?

மதவெறி சக்திகளை மண் கவ்வச் செய்வதே, காமராசருக்குச் சூட்டும் அற்புத மாலையாகும்.
வாழ்க காமராசர்!

வருக அவர் விரும்பிய சமதர்ம சமுதாயம்!!

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்


முகாம்: சிங்கப்பூர்

15.7.2015

தமிழ் ஓவியா said...

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
தந்தை பெரியாரின் கூற்று மெய்யா? பொய்யா?

இதுவரை நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துகள்..

2015  ஜூலை 14: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். (பலி எண்ணிக்கை உயரலாம்) 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2014 ஆகஸ்ட் 25: மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

2013 அக்டோபர் 13: மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.

2013 பிப்ரவரி 10; உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர்.

2012 நவம்பர் 19: பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர்.

2012 செப்டம்பர் 24: ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர்.

2012 பிப்ரவரி 19: குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர்.

2011 நவம்பர் 8:  ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

2011 ஜனவரி 14: கேரளாவின் சபரி மலையில் நெரிசல் ஏற்பட்டு 106 பக்தர்கள் பலியாகினர்.

2011 ஜனவரி 8: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை  நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர்.

2010 மார்ச் 4; உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம், இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.

2008 செப்டம்பர் 30: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர்.

2008 ஜூலை: ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.

2007 ஆகஸ்ட் 15: குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர்.

2006 ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

2005 ஜனவரி 26:  மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2003 ஆகஸ்ட் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர்.

1992 பிப்ரவரி 18: தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
கடவுளை நம்பியோர் கைவிடப் பட்டார்களே!

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவநம்பிக்கை

பூரிஜெகந்நாதக் கோயில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அதி காரிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது? கடவுள் சக்தியின்மீதான அவநம்பிக்கையைத் தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...

கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை


- கி. தளபதிராஜ்



பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15.  இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற் காலம். தொழில்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர் களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை யையும் மீறி புத்துயிர் ஊட்டினார்.

ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக் கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காம ராஜர்!. அதனால் "பச்சைத்தமிழர் காமராஜர்" எனப் பாராட்டி உச்சி முகர்ந் தார் பெரியார்!.

நான் தீமிதி, பால் காவடி, அப் படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட் சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக் கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளி யாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க லாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரி யாப் போச்சா? எனக் கேட்டவர் காமராசர்

இடஒதுக்கீட்டு கொள் கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு, "டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சி னீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சு போச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத் தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்." என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர்.

காரியம் காமராஜர்! காரணம் பெரியார்! என ஆனந்த விகடனே எழுதியது. எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது. ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார்.

தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது, செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது. இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு? என்றாரே பார்க்கலாம். தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல. பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே! அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது.

தமிழ் ஓவியா said...

காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

கட்சிகளின் நிலைமை


கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவையாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்தவேண்டியதாகப் போய்விட்டது.
_ (குடிஅரசு, 18.12.1943)