Search This Blog

6.2.16

மதமும், முதலாளித்தனமும் ஒழிய வேண்டும்-பெரியார்


- தந்தை பெரியார்



சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் சாஸ்திரங்களையும், சடங்கு களையும் ஒருவாறு கண்டித்ததோடு கூட அரசியலில் பார்ப்பனர்களைப் பலமாக எதிர்த்தும் போராடியது என்பது யாவரும் அறிந்ததாகும். இக்கார ணத்தால் பார்ப்பனர்களிடம் உள்ள உத் யோகங்களைத் தாங்கள் கைப்பற்ற வேண்டும் என்னும் நோக்கமுடைய பார்ப்பனரல்லாதார்கள் அனைவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பலமாக ஆதரித்து வந்தனர். பிறகு சுயமரியாதை இயக்கம் உண்மையான உருவத்தைக் காட்ட ஆரம்பித்தது. அதாவது மதத் தையும், சடங்குகளையும், கடவுளையும் கூட அடியோடு அழிக்க வேண்டு மென்னும் பிரச்சாரத்தில் இறங்கியது. இதனால் முதலில் ஆதரித்த சிலர் சுயமரியாதை இயக்கத்தை விட்டு விலகிக் கொள்ளாமலும், அதில் கலந்துகொள்ளாமலும், நடுத் தெருவில் நின்றனர். இதன் பின் சில மாதங்களாக, ஈரோடு வேலைத்திட்டத் தீர்மானங் களை மேற்கொண்டு, சமதர்மப் பிரசாரம் செய்து வந்தது. இதைக் கண்டும் அநே கர் பயந்து எங்கே சமதர்மப் பிரசாரத் தினால் தங்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சி ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்.

சிலர் சுயமரியாதை இயக்கம் முன்பிருந்தது போலவே அரசியலில் ஈடுபடாமல் பகுத்தறிவுப் பிரசாரம் மாத்திரம் செய்து கொண்டிருக்க வேண் டுமென அபிப்பிராயப்பட்டுக் கொண்டி ருக்கின்றனர். சிலர், ஈரோட்டுத் தீர்மா னங்களை ஒப்புக்கொண்டு, அரசியலிலும் தலையிட்டு சமதர்மப் பிரசாரத்திலும் ஈடுபடவேண்டும் என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் பார்ப்பனர்களை மாத்திரம் வைதுகொண்டு, பார்ப்பனரல்லாதார்க்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத் தால் போதுமென நினைக்கின்றனர். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் எந்த விதமாக வேலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய நமது முடிவை வெளி யிடுகிறோம்.


முதலில் சுயமரியாதைச் சமதர்ம இயக்கமானது, ஒரு வகுப்பை மாத்தி ரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு மாகாணத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஒரு தேசத்தை மாத்திரம் பொறுத்த இயக்கமல்ல; ஆனால் ஓர் அகில உலக இயக்கமாகும் என்பதை ஒவ்வொருவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இக்கொள்கையை மனத்தில் வைத்துக்கொண்டே அதன் கொள்கைகளும், சட்ட திட்டங்களும், வேலை முறையும் அமைக்கப்பட வேண்டும்.


வகுப்பு பேதங்கள் ஒழிந்து, எல்லாம் ஒன்றாகவேண்டும் என்னும் எண்ணம் எல்லா மக்கள் மனதிலும் வேரூன்றி வருகிற இக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மாத்திரம் ஆபாச முறையில் கண்டிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதே நமது தாழ்மையான அபிப்பிராயமாகும். பார்ப்பனருக்கும், நமக்கும் எக்காலத் திலும் பகையில்லை. பார்ப்பனீயத்திற்கும், நமக்குமே போராட்டம். பார்ப்பனீயத்தை விடாப் பிடியாகப்பிடித்திருக்கும் பார்ப் பனரல்லாதாரே அதிகம். பார்ப்பனீயம் எங்கெங்கே இருக்கின்றதோ அங்கெல் லாம் நமது போராட்டம் சென்றுதான் தீரவேண்டும். வகுப்புத் துவேஷம் என்பது ஒரு வகுப்பினர் அடிக்கும் கொள்ளைத் தொழிலை இன்னொரு வகுப்பினர் கைப்பற்றிச் செய்யும் முயற்சியேயாகும். ஆதலால் நமக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லை.

சுயமரியாதை இயக்கம் இதுவரை யிலும் செய்து வந்த மத ஒழிப்பு வேலையைச் சிறிதும் தளரவிட முடியாது. நமது கொள்கைகளுக்கெல்லாம் அடிப் படை இதுவேயாகும். இப்பொழுது மதத்திற்கு நெருக்கடி நேர்ந்திருக்கும் விசயத்தை மதவாதிகளும், முதலாளி வர்க்கத்தினரும் உணர்ந்து விழித்திருக் கின்றனர். இருவரும் கூடி மீண்டும் பாமர மக்களின் மனதில் மதவுணர்ச்சியை (அடிமை மூடத்தனத்தை)ப் புகுத்த பலமான முயற்சிகளைச் செய்து வருகின் றனர். தேசிய இயக்கங்களும் (முதலாளி இயக்கங்கள்) தேசியவாதிகளும் பலமான மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர். இதற்கு காந்தி அவர்களின் ஹரிஜன இயக்கமும், இந்து மகாசபைப் பிரச்சாரமும் போதிய சான்றாகும். ஆகை யால், நாம் முன்னிலும் அதிதீவிரமாக மதமறுப்புப் பிரச்சாரத்தை விடாமல் செய்ய வேண்டியது முக்கியமானதாகும்.
சமதர்ம திட்டத்தை மேற்கொண்டு அரசியலில் தலையிட வேண்டுவது அவ சியம் என்பது ஆலோசிக்கத் தக்கதாகும். அரசாங்கத்தின் துணையில்லாமல், சட்டங் களின் ஆதரவில்லாமல், தேச மக்களிடம் உள்ள ஊழல்களை அடி யோடு போக்கி விடவோ புதிய காரி யங்களைச் செய்வதில் தேச மக்களை ஈடுபடுத்திவிடவோ எக்காலத்திலும் இயலாது. ஆதலால் சீர் திருத்தவாதிகளுக்குத் தங்கள் சீர்திருத்தக் கொள் கைகள் செயலில் நடைபெற வேண்டு மானால் அரசாங்கத்தின் துணையும், சட்டத்தின் துணையும் அவசியமாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில் நமது நாட்டில் இனி அமையப் போகும் அரசாங்கம் கட்சிகளால் ஆளப்படும் அரசாங்கமாகவே இருக்கும் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுயமரியாதை இயக்கமானது நேர்முகமா கவோ, அல்லது மறைமுக மாகவோ சமதர்ம திட்டமுடைய அரசியல் கொள்கையையும் ஒப்புக்கொண்டு தீர வேண்டிய அவசியத்தை அறிஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே நம்புகிறோம். நமது சமதர்ம அரசியல் திட்டத்தைக் கண்டு யாரும் அஞ்சவேண்டிய அவசிய மில்லை. அரசாங்க சட்டத்திற்குள் அடங்கியே நமது அரசியல் இயக்கம் வேலைசெய்து வரும். பலாத்கார முறை யையும் நாம் ஒப்புக்கொள்ளுவதில்லை. இத்தகைய சமதர்ம அரசியல் திட் டத்தைக்கண்டு ஏன் பயப்படவேண்டும்?

(5) சமூகச் சீர்திருத்த வேலையையும் அதை நிறைவேற்ற அரசியலைக் கைப் பற்றும் வேலையையும் சுய மரியாதை இயக் கத்தின் திட்டமாக வைத்துக் கொண்டு இரண்டையும் செய்து வர லாமென அபிப்பிராயப்படு கின்றவர்களும் பலருளர். ஆனால் இரண்டு வேலைகளை யும் ஒரே இயக்கம் அதாவது ஒரே ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் செய்ய முடியுமா? என்பது ஆழ்ந்து ஆலோசிக்கத் தக்க விஷயமாகும். தற்பொழுது சமூக சீர்திருத்த வேலையென்பது, அரசாங்க விஷயங்களில் தலை யிடாமல் ஜன சமூகத்துக்கு இடையேயுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் போக்குவதும், அப்பழக்க வழக்கங்களில் வைத் துள்ள நம்பிக்கையை ஒழிப் பதும், புதிய வாழ்க்கை முறையில் பற்றுக் கொள்ளச் செய்வதும் ஆகும். இதைப் பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி வருவதே சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய வேலையாகும். இவைகளைச் சட்டத்தின் மூலம் ஜன சமூகத் தில் புகுத்த அரசாங்கத்தைக் கைப்பற்ற வேலை செய்வது அரசியல் இயக்கமாகி விடும். இவ்வளவே தான் சமூக சீர்திருத்த இயக்கத்திற்கும், அரசியல் இயக்கத் திற்கும் வித்தியாசம் என்று கூறலாமே தவிர, வேறு காரணம் கூறுவதற்கு நமக்குத் தோன்ற வில்லை. மற்றபடி சமூகச் சீர்திருத்தம் என்பதும், அரசியல் என்பதும் ஒன்றே தவிர வேறில்லை. சமூகம்தான் அரசியல், அரசியல் தான் சமூகம். இரண்டையும் வேறுபடுத்தி பிரிக்க முடியாது. ஆயினும் இருகாரியங்களையும் ஒரே ஸ்தாபனத் தின் மூலம் நடைபெறும் இயக்கத்தினால் தற்சமயம் செய்ய முடியாதென்பது நமது கருத்து. இத்தகைய இரு நோக் கத்தையும் கொண்டு தொடங்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியின் அக்காலநிலையை நோக்குவார் இதன் உண்மையை நன்கு தெரிந்து கொள்ளலாம். பிரசாரம் பண்ணும் வேலையையும் காரிய நிர்வாகம் செய்யும் வேலையையும் எப்படிச் செய்ய முடியும். சமூகச் சீர்திருத்தத்திற்கும் நாட்டில் பலமான எதிர்ப்பு இருக்கின்றது. சமதர்ம அரசியலுக்கும் நாட்டில் எதிர்ப்பு இருக்கிறது. இரண்டிற்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டு இரண்டையும் இயக்கம் செய்து முடிப்பது என்பது சாமானியமான காரியமல்ல. இவ்விரண்டு கொள்கைகளுக்கும் உள்ள எதிர்ப்பைச் சமாளித்துக் கொள்ளுகின்ற திறமை ஓர் இயக்கத்திற்குத் தற்கால நிலையில் ஏற்பட முடியாது. சமதர்ம அரசியல்வாதிகள் அரசாங்க அதிகா ரத்தை வகிக்க வரும் காலத்தில்தான் இரண்டையும் செய்ய முடியும். அது வரையிலும் சீர்திருத்த இயக்கம் தனித்து நின்று வேலை செய்ய வேண்டுவது அவசியமல்லவா? என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு வேண்டுகிறோம்.
பொருளாதாரத் திட்டத்தையும், சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப் பதையும் வேலை முறையாகக் கொண்ட சமதர்ம அரசியல் கட்சி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய கட்சி தற்பொழுது நமது நாட்டில் ஒன்றுகூட இல்லை. ஜனநாய கக் கட்சியென்றும், வகுப்புவாதக் கட்சியென்றும் சொல்லிக் கொண்டி ருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் முதலாளிக் கட்சிகளே என்பது வெட்ட வெளிச்சம். இக்கட்சியின் நோக்கத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள் யாராயிருப்பினும் நிற வகுப்பு, மத வேற்றுமை பாராமல் அவர்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசிய மாகும். இந்த அரசியல் கட்சி, சுயமரியாதை இயக்கத் தினால் பிரசாரம் பண்ணப்படும் சீர்திருத்தங்களுக்கெல்லாம் ஆதர வளித்து வர வேண்டுமென் பதையும் கட்சிக் கொள்கையில் முக்கியமான ஒன் றாகக் கொள்ள வேண்டும். இதற் கென்று ஒரு தனி ஸ்தாபனம் இருக்க வேண்டியது அவசிய மாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களைக் கொண்ட, அரசியல் கலப்பற்ற, தனி ஸ்தாபனம் ஒன்று வேண்டுவது அவசிய மாகும். இந்த ஸ்தாபனத்தில் அரசியல் நிறம் வகுப்பு முதலிய வேற்றுமை பாராட்டாமல் மதமற்றவர்கள் எல்லோ ரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சமதர்ம அரசியல் கட்சியாரை எப்பொழுதும் ஆதரித்து நிற்க வேண்டும். தற்பொழுது சுயமரியாதை இயக்கம் செய்து வரும் சமூக வேலையைச் செய்து வர வேண்டும்.
மேற்கூறிய இரு இயக்க ஸ்தாப னங்களின் உறுப்பினர்கள் அந்த ஸ்தா பனங்களின் கொள்கைகளுக்கு மாறு படாதவர்களாகவும், அக் கொள்கைகளை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு நடக் கின்றவர்களாகவும், அவைகளுக்காகத் தியாகஞ் செய்யப் பின் வாங்காதவர் களாகவும் இருக்க வேண்டும். மற்றபடி இயக்கப் பிரசாரத்தில் அதாவது மகா நாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். நமது பல கொள்கைகளுக்கு எதிரியாக இருந்து ஒரு கொள்கைக்குச் சாதகமா யிருப்பார்களாயின் அதைப் பொறுத்த வரையிலும் அவர்களை நம்மோடு அவரோடு ஒத்துழைப்பதிலே ஒரு தவறும் நேர்ந்துவிடாது. அதனால் இயக்கத் திற்கு லாபமே தவிர நஷ்டம் வந்துவிடாது. பிரசார நிலையில் கட்டுப்பாடு ஏற்படுத் தினால் இயக்கம் வளருவதற்கே வழி யில்லாமற் போய்விடும். நமது கொள் கைக்கு முரண்பட்டவர்களை நம்மோடு சேர்க்கக்கூடாது, நமது கூட்டத்திற்கு வரக்கூடாது என்றால் அவர்களை எப்படி நமது கொள்கைகளை ஒப்புக்கொள்ளச் செய்யமுடியும்? ஆதலால் பிரசாரத்தின் பொருட்டு நம்மிடம் சிறிது அனுதாபம் உள்ள எவரையும் சேர்த்துக் கொள்ள மறுக்காமலிருப்பதே இயக்க வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
மேலே கூறிய விஷயங்களைக் கவனித்துச் சுய மரியாதை இயக்கத் தையும், சமதர்ம இயக்கத்தையும் நடத்தி வந்தா லொழிய உருப்படியான வேலை எதையும் செய்துவிட முடியாது என்பதே நமது கருத்து. இன்னும் பார்ப்பனர்களை மாத்திரம் வைது கொண்டிருப்பதனால் ஒரு பயனுமில்லை. நாமறிந்தவரையில், நமது சமதர்மக் கொள்கைகளையும், சுய மரியாதை இயக்கக் கொள்கைகளையும் முழுதும் ஒப்புக்கொண்டு வேலை செய்வ தற்குத் தயாராக எல்லா வகுப்பினரில் வாலிபர்களும், அறிவுடையவர்களும், இருக்கிறார்களென்பதை நிச்சயமாகக் கூறுவோம். ஆதலால் இனி பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், இந்துக்கள், முஸ் லீம்கள், கிறிஸ்துவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், என்ற பிரச்சினைகள் நம்மிடம் தலைகாட்டாமல் ஒழிக்க வேண்டும்; முதலாளிக் கொடுமைகளை ஒழிப்பதையும், மதக்கொடுமைகளை ஒழிப்பதையுமே பிரச்சினையாகக் கொண்டு இப்பிரச்சினையை ஒப்புக் கொள்கின்றவர்களை எல்லாம் இயக்கத் திற்கு சேர்த்துக் கொண்டு இப் பிரச் சினைகளைத் தீர்க்க வழி கோலுவதே சிறந்ததாகும். மேற்கூறியவைகளையெல் லாம், விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவு செய்யும்படி சுயமரியாதைத் தோழர்களை வேண்டிக் கொள்கிறோம்.
------------------ தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை, "விடுதலை", 11.7.1950 

0 comments: